மும்பை, புனேவில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அறிமுக அணிகளாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


தற்போது ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல பிரதான வாய்ப்பு உள்ள நிலையில், நான்காவது அணியாக உள்ளே செல்ல டெல்லியும், பெங்களூரும் போட்டோ போட்டியில் உள்ளது. பெங்களூர் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத்தை வென்றுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தினால் மட்டுமே பெங்களூர் அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.




இந்த நிலையில், நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் டெல்லி, பெங்களூர் அணி சம புள்ளிகள் பெறும். ரன்ரேட் அடிப்படையில் டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.


இதனால், பெங்களூர் ரசிகர்கள் அனைவரும் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் முக்கிய வீரர் விராட்கோலி நாளை மைதானத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மாவிற்கு விராட்கோலி ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியாக நாளை நடைபெறும் போட்டி ப்ளே ஆப் சுற்றுக்கு போகும் கடைசி அணி யார் என்பதை தீர்மானிக்கப் போவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியதில்லை. டுப்ளிசிஸ் தலைமையில் களமிறங்கியுள்ள பெங்களூர் அணி இந்த முறையாவது கோப்பையை கைப்பற்ற  வேண்டும் என்றால், நாளை நடக்கும் போட்டியில் டெல்லி கட்டாயம் தோற்றாக வேண்டும் என்று பெங்களூர் ரசிகர்கள் பிரார்த்தி வருகின்றனர்.