ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடருக்கான தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த சீசனே கடைசி சீசனாக இருக்கும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் தோனிக்கு இந்த போட்டியே கடைசி போட்டியாக அமைந்து விடும்.
கடவுளுக்கு நன்றி சொன்ன தோனி:
இந்த நிலையில், குஜராத் அணியுடன் டாஸ் வென்ற தோனியிடம் வர்ணணையாளரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி 18 வருடங்களாக ஐபிஎல் ஆடுகிறீர்கள். உடலை எப்படி பராமரிக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த தோனி, நான் சமாளிக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புதிய சவால் இருக்கிறது. உங்கள் கேரியரின் கடைசி கட்டத்தில் முடிவில் இருக்கும்போது உடலை அதிகளவு பராமரிக்க வேண்டும். அணியின் உதவியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். உடலை பராமரிக்க அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. சர்வேச போட்டிகளில் நான் நமது நாட்டிற்காக ஆடியபோது உடல் அந்தளது தொந்தரவு செய்யாததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ரசித்து ஆடுவோம்:
மதியம் 3.30 மணி முதல் 4 மணிக்கு பிறகு சென்னை மிகவும் அற்புதமான இடம். இது மிகவும் வித்தியாசமான வெப்பநிலை. நாங்கள் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளோம். நாங்கள் வென்றாலும் தோற்றாலும் கடைசி இடத்தில்தான் நீடிப்போம். எங்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோனி மைதானத்திற்கு டாஸ் போட வரும்போது ரசிகர்கள் இருபுறமும் சூழ்ந்து கொண்டு தோனி, தோனி என்று கரகோஷம் எழுப்பினர். தோனி சென்னை அணியின் அடையாளமாக திகழ்கிறார். தோனி என்றால் சென்னை என்றும், சென்னை என்றால் தோனி என்றும் சொல்லும் அளவிற்கு அவருக்கும் சிஎஸ்கே-விற்குமான பந்தம் தொடர்கிறது.
தோனிக்காக கூடும் கூட்டம்:
43 வயதான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின்பு, ஒவ்வொரு வருடமும் அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வருகிறார். தோனியை பார்க்கவே சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி சிஎஸ்கே ஆடும் ஒவ்வொரு மைதானத்திற்கும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
கேப்டனாக சென்னை அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த தோனி, இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 439 ரன்களை எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும்.