ஐபிஎல் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி பெற்ற வெற்றியின் மூலம், லக்னோ அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.


சிறப்பான தொடக்கம்:


லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு நல்ல துவக்கம் அமைந்தது. தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் இஷான் கூட்டணி, அதிரடியாக ஆடி ரன் குவித்தது. இருவருமே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர். இதனால், பவர்பிளேயின் முதல் 6 ஓவர்கள் முடிவிலேயே இந்த கூட்டணி 58 ரன்களை குவித்தது. 


அடுத்தடுத்து விக்கெட்:


தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், 37 ரன்கள் சேர்த்து இருந்தபோது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். 59 ரன்கள் சேர்த்து இருந்தபோது பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, இருமுனைகளில் இருந்தும் சுழற்பந்து வீச்சை கொண்டு லக்னோ அணி கடுமையான நெருக்கடி கொடுத்தது. அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ் - வதேர கூட்டணி தவித்தது. தொடர்ந்து, 7 ரன்கள் சேர்த்து இருந்தபோது சூர்யகுமார் போல்டானார். வதேரா 16 ரன்களில் நடையை கட்டினார்.


இறுதியில் அதிரடி:


இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய விஷ்ணு வினோத் 2 ரன்களில் நடையை கட்டினார். மும்பை அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  19வது ஓவரில் மட்டும் 19 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.


வெற்றி:


ஆனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எட்டியது. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேற. மும்பை அணி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


லக்னோ பேட்டிங்:


லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் தொடரின் 63வது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதின. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


ஆரம்பமே அதிர்ச்சி:


இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரரான தீபக் ஹூடா வெறும் 5 ரன்களில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து வந்து இளம் வீரர் மன்கட் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 12 ரன்களை சேர்ப்பதற்குள் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


வெளியேறிய க்ருணால்:


சற்றே நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க வீரரான டி-காக், 2 சிக்சர்கள் உட்பட 16 ரன்கள் சேர்த்து கேட்ச் முறையில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் க்ருணால் மற்றும் ஸ்டோய்னிஷ் பொறுப்பாக விளையாடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர். இதனால், 34 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் மும்பை அணி திணறியது. இதனிடையே, 49 ரன்கள் சேர்த்து இருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, க்ருணால் பாண்ட்யா  மைதானத்தில் இருந்து வெளியேறினார்.


ஸ்டோய்னிஷ் அதிரடி:


தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஷ் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஜோர்டன் வீசிய ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 47 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.


மும்பை அணிக்கு இலக்கு:


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை எட்ட முடியாமல் மும்பை அணி தோல்வியை தழுவியது.