சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வெளியிட்ட நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


ஓட முடியாமல் தவித்த தோனி


சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கிடையேயான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களமிறங்கிய நிலையில் 20 ஓவரில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் களமிறங்கிய வீரர்கள் யாரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காத நிலையில் அத்தகைய ரன்கள் வந்தது ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


இதனைத் தொடர்ந்து களம் கண்ட டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு140 ரன்களே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோற்ற டெல்லி அணி முதல் ஆளாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இதற்கிடையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “விக்கெட்டுகளுக்கு இடையே தோனி நொண்டியடிப்பதைப் பார்க்கும்போது என் இதயம் உடைகிறது. சிறுத்தை போல ஓடுவதை பார்த்திருக்கிறேன்” என தெரிவித்திருந்தார். 


அதாவது நேற்றைய போட்டியில் 16வது ஓவரில் கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். பொதுவாக தோனி என்றாலே மின்னல் வேக ரன்னிங், ஸ்டம்பிங் தான் ரசிகர்களுக்கு நினைவு வரும். ஆனால் நேற்று தோனி ஒன்பது பந்துகளில்  இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களை விரைவாக எடுத்தாலும் ரன்களை ஓடி எடுக்கும் போது மெதுவாகவே ஓடினார். மேலும் இரண்டாவது ரன்னை எடுக்க அவர் பெரிய அளவில் மெனக்கெடவே இல்லை. 


முழங்கால் காயத்தால் அவதி 


41 வயதாகும் தோனி நடப்பு தொடர் தொடங்கியதில் இருந்தே முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் முன்பை போல ஓட முடியவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இதனால் ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில் இர்ஃபான் பதான் வெளியிட்ட புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அதில், “பழைய நாட்களை நினைவில் கொள்ளாத நேரமே இல்லை. நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சில வேடிக்கையான நினைவுகள் நம் வாழ்வில் வரும்” என பதான் தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில்  தோனி  முகமலர்ச்சியுடன் புகைப்படத்திற்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்தாலும், மூட்டு உறை அணிந்துள்ளார். விரைவில் அவர் காயத்தில் இருந்து குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.