ஐ.பி.எல். தொடரின் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு தொடரின் பலமிகுந்த அணியாக உலா வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  இன்று மற்றொரு பலமான அணியான லக்னோவுடன் மோதுகிறது. ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. 


நடப்பு தொடர் தொடங்கியது முதலே மிகவும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் ஆடி வரும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது. இதுவரை இந்த தொடரில் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதனால், 8 புள்ளிகளுடன் 1.35 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மிகவும் பலமான அணியாகவே உள்ளது. அந்த அணி இதுவரை தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே தோல்வியை அடைந்துள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தானுடன் புள்ளிகளை சமன் செய்ய லக்னோ அணி களத்தில் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 


பேட்டிங் என்று ஒப்பிட்டு பார்த்தால் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் சம பலத்துடன் உள்ளன. ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் எப்போதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வீரர் ஆவார். அவர் அதிரடியாக ஆடினால் ராஜஸ்தான் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். அவருக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பக்கபலமாக உள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் மிகப்பெரிய பலமாக உள்ளார். எந்த நேரத்தில் இறங்கினாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் அதிரடி காட்டும் திறமை கொண்ட சாம்சன் லக்னோவிற்கு நெருக்கடி அளிக்கும் பேட்ஸ்மேன் ஆவார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் அதிரடி ராஜஸ்தானுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


லக்னோ அணியை பொறுத்தவரை மேயர்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளிப்பார் என்று நம்பலாம். பவர்ப்ளேவில் அதிரடி காட்டி அசத்தி வருகிறார்.  ஸ்டோய்னிசும், பூரணும் லக்னோ அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். இருவரும் 20 பந்துகள் வரை களத்தில் பேட் பிடித்தாலே சிக்ஸர் விருந்து வைத்துவிடுகின்றனர். லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினாலும் அவரது வழக்கமான அதிரடி திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். பதோனி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டுவார் என்று நம்பலாம். தீபக் ஹூடாவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.