ஐபிஎல் சீசன்:


16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.


இன்றைய போட்டி


ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல், 27) நடக்கவுள்ள 3வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹோம் - அவே முறைப்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதனால் அனைத்து போட்டிகளும் பெரும்பாலும் மைதானம் நிரம்பிய காட்சியாகத்தான் உள்ளது. ஆனால் சென்னை அணியைப் பொறுத்தவரையில் ஹோம் - அவே என்ற மாறுபாடே இல்லாமல், உள்ளது. தோனியின் கடைசி சீசன் என கூறப்படுவதால் சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் சென்னை அணியின் ரசிகர்கள் மைதானத்தினை நிரப்பி விடுகின்றனர். ரசிகர்கள் மத்தியில்ன் இருந்து வரும் புத்துணர்ச்சி சென்னை அணிக்கு தனி உத்வேகத்தினை அளிக்கும் போல் தெரிகிறது. இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 5 போட்டிகளை வென்றுள்ள சென்னை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி சந்தித்த இரண்டு தோல்விகளில் ஒன்று சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிராகவும், மற்றொன்று நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத்துக்கு எதிராகவும் தான். மற்றபடி பலமான அணிகள் என கூறப்படும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா அணிகளை அதன் சொந்த ஊரில் வைத்தே சென்னை அணி சம்பவம் செய்துள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ்  இதுவரை 


ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியமான அணியாக இருப்பது ராஜ்ஸ்தான் அணி. சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்த அணி மிகசசிறப்பான அணியாக உள்ளது. களமிறங்கும் 12 வீரர்களும் திறம்பட செயல்படுவதால் எதிரணிக்கு இவர்களை எதிர்கொள்வது மிகவும் சவாலான விசயாமாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 3இல் தோல்வியும் 4இல் வெற்றியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், இன்று இந்த அணி எதிர்கொள்ளவுள்ள சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வெற்றி கண்டுள்ள நம்பிக்கையில் ராஜஸ்தான் அணி இன்று களமிறங்கும் எனலாம். 


முதல் இடம்


இதில் சென்னை அணி ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், இந்த போட்டியில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருக்கும். ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். இன்று இரவு நடக்கும் போட்டி முதல் இடத்துக்கான போட்டியாகத் தான் உள்ளது.