IPL 2027 Schedule: வரும் 2027ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் பரிசீலனை நடைபெற்று வருகிறதாம்.

Continues below advertisement

2027ம் ஆண்டு ஐபிஎல் தொடர்:

இந்தியாவை தாண்டி சர்வதேச கிரிக்கெட் திருவிழாவாக இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் உருவெடுத்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு இந்த தொடரானது தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 20-வது சீசனை நெருங்கும் நிலையில், கடுமையான கோடை வானிலை மற்றும் பருவமழைக்கு முந்தைய மழையைச் சமாளிப்பதற்காக, போட்டி நடைபெறும் கால அட்டவணையில் பெரிய மாற்றங்களைச் செய்வது குறித்து பிசிசி தீவிரமாக பரிசீலித்து வருகிறதாம். அந்த வகையில் அடுத்த ஆண்டு தொடருக்கான அட்டவணை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

2027ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான உத்தேச அட்டவணை:

ஆரம்பத்தில் ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் (FTP) 2027, மார்ச் 14 முதல் மே 30 வரையிலான காலவரம்பை வரையறுத்திருந்த நிலையில், செயலாளர் தேவாஜித் சாய்கியா உள்ளிட்ட பிசிசியின் உயர் அதிகாரிகள், அடுத்த ஐபிஎல் சீசனை சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடத்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

உத்தேச தொடக்கத் தேதி: மார்ச் 10, 2027

உத்தேச இறுதி போட்டிக்கான தேதி: மே 15, 2027

காலநிலை காரணமாக நடவடிக்கை:

வழக்கமான பாணியாக இல்லாமல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப் போட்டியை மே மாத இறுதியில் இருந்து மாற்றுவதற்கு, வட/மேற்கு இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளைத் தவிர்ப்பதுடன், மே மாதத்தின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை நடக்கும் ப்ளேஆஃப் போட்டிகளை அடிக்கடி சீர்குலைக்கும் பருவமழை பாதிப்பை தவிர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மொத்தப் போட்டிகள் 74 போட்டிகள் (70 லீக் சுற்றுப் போட்டிகள் + 4 பிளேஆஃப் போட்டிகள்)

மொத்த அணிகள்: 10 

போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

2023-2027 சுழற்சிக்கான ஆரம்ப ஊடக உரிமை ஒப்பந்தங்கள், லீக் கட்டத்தை 84 அல்லது 94 போட்டிகளாக விரிவுபடுத்த வாய்ப்பு அளித்து இருந்தாலும், 2027 சீசனில் 74 போட்டிகளே நடைபெறும் என பிசிசி உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இருதரப்புப் போட்டிக் கால அட்டவணைகள் மற்றும் வீரர்களின் பணிச்சுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய விளையாட்டு வாரியங்கள் சர்வதேசப் போட்டி அட்டவணைகளை ஒருங்கிணைக்கும் நிலையில் -போட்டிக்கான கால அட்டவணையை 60 நாட்களுக்கும் அதிகமாக விரிவுபடுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளன.

இதையும் படியுங்கள்: CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

ஓய்வு பெறும் ஜாம்பவான்கள்?

ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து முழுமையாக ஒய்வு பெற்ற முன்னாள் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். காயம் காரணமாக கடந்த சீசனில் முழுமையாக விளையாடாத நிலையில், அடுத்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றோர்களும், அடுத்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளியேறி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த சீசனுடன் ஐபிஎல் தொடரை கட்டி ஆண்ட மூன்று ஜாம்பவான்களும் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஒய்வு பெறக்கூடும்.