இந்திய அணி ஆடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டது ஐ.பி.எல். தொடர். டி20 வடிவத்தில் நடத்தப்படும் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.


கொல்கத்தாவிற்குச் செல்லும் சூர்யகுமார் யாதவ்:


மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக சூர்யகுமார் யாதவ் உள்ளது. ஐ.பி.எல். தொடரை இன்னும் விறுவிறுப்பாக்குவதற்காகவும்,  அணிகளின் பலத்தை சரிசம விகிதத்தில் வைத்திருப்பதற்காகவும் அணிகளே தங்களுக்குள் வீரர்களை பரிமாறிக் கொள்கின்றனர்.


அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியில் இருந்து வாங்கப்பட உள்ள சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக கொல்கத்தா அணிக்காக மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யரை மும்பைக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மும்பைக்கு வரும் ஸ்ரேயாஸ்:


இது இருவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஐ.பி.எல்.க்கு முன்பாக முக்கியமான வீரர்களை பரிமாறிக் கொள்ள அணி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால், பல முன்னணி வீரர்கள் இத்தனை ஆண்டுகள் ஆடிய அணியில் இருந்து வேறு அணிக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா மும்பையில் இருந்து ஆர்.சி.பி.க்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி மும்பை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவும் கொல்கத்தா அணிக்குச் செல்ல இருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


டிசம்பரில் ஏலம்:


ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கொல்கத்தா அணிக்கு சூர்யகுமார் யாதவ் சென்றால் அவருக்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே தனது ஆரம்ப காலத்தில் கொல்கத்தா அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கவுதம் கம்பீருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, கம்பீர் பயிற்சியாளராக இந்திய அணிக்கு பொறுப்பேற்றதும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.


டிசம்பர் மாதம் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும், அவர்கள் தங்கள் புதிய அணியுடன் அடுத்த ஐ.பி.எல். தொடரில் ஆடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.