IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், மைதானங்களிலும் சண்டையிட்டுக் கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கப்பட்டதன் உள்நோக்கமே திறமையான இளம் இந்திய வீரர்களை கண்டறிந்து அவர்களை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும். அந்த நோக்கத்திற்கான பலன் கிடைத்துள்ளது என்று கூறலாம். அதேசமயம், பல எதிர்பாராத நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது என்று கூறலாம்.
ரசிகர்கள் மோதல்:
எந்த ஒரு விளையாட்டிலும் ரசிகர்களுக்கு பிடித்த அணிகள், பிடிக்காத அணிகள் இருப்பது வழக்கமான ஒன்றாகும். அதற்காக தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவாகவும், தங்களுக்கு பிடிக்காத அணிக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்து வருவதும் வழக்கம் ஆகும். இந்த போக்கு ஐபிஎல் தொடரிலும் நீடிக்கிறது.
Just In




ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை அதிகளவு ரசிகர்களை கொண்ட அணிகளாக இருப்பது சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஐதரபாத் அணிகள் ஆகும். இந்த அணிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிகளவு ரசிகர்களை கொண்ட அணிகளாக சென்னை, மும்பை, பெங்களூர் அணிகள் உள்ளன.
வெறியும், விரோதமும்:
இந்த அணிகள் மற்ற அணிகளுடன் மோதும்போது அந்தந்த அணியின் ரசிகர்கள் சிலர் எதிரணிகளை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதாவது, தொடக்க காலத்தில் ரசிகர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் அந்த அணிகளின் வெறியர்களாக மாறினார்கள். பின்னாளில் அந்த வெறியானது மற்ற அணியின் ரசிகர்களை விரோதிகளாக பார்க்கும் மனநிலையை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் மட்டும் நடந்து வந்த இந்த மோதல்கள் தற்போது மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் மோதிக்கொள்ளும் வகையிலும் தாக்கிக் கொள்ளும் வகையிலும் ரசிகர்களை மாற்றியுள்ளது. கடந்த சில சீசன்களாகவே இதுபோன்ற வார்த்தை மோதல்களையும், கைகலப்புகளையும் பார்த்து வருகிறோம்.
சண்டை, கைகலப்பு:
கடந்த சீசனில் ப்ளே ஆஃப்க்கு செல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்ற பிறகு பெங்களூரில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள் சிலர் சென்னை ரசிகர்களை சீண்டினர். அதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில ரசிகர்கள் பெங்களூர் ரசிகர்களை சீண்டினர். குறிப்பாக, அந்த ப்ளே ஆஃப் போட்டிக்கு பிறகு ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்கள் மோதல் மிக தீவிரம் அடைந்தது.
இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை காண ஆர்சிபி ரசிகர்கள் சிலர் வந்தபோது சில சிஎஸ்கே ரசிகர்கள் அவர்களை கேலி செய்யும் விதமாக கூச்சலிட்டனர். இதேபோல, சென்னை - மும்பை போட்டியின்போதும் சமூக வலைதளங்களிலும், மைதானங்களிலும் சில ரசிகர்கள் ஈடுபடுகின்றனர்.
ஸ்போர்ட்மேன்ஷிப், ஜென்டில்மேன் குணம் எங்கே?
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைப்பதன் அர்த்தமே இதுபோன்ற செயல்களால் சிதைந்து வருகிறது. ஸ்போர்ட்மேன்ஷிப்பை அதிகம் வளர்க்கும் விளையாட்டில் கிரிக்கெட் ஒன்று. அந்த ஸ்போர்ட்மேன்ஷிப்பை அதிகம் பாராட்டும் ரசிகர்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முக்கியமானவர்கள்.
அழகல்ல
ஆனால், அந்த ரசிகர்களில் சில ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான கோலி, தோனி, ரோகித் போன்ற வீரர்கள் விளையாடும் அணிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கருதி எதிரணியையும், எதிரணி ரசிகர்களையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. இது கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் போன்ற விளையாட்டிற்கும், ஸ்போர்ட்மேன்ஷிப்பையும், திறமையையும் மதிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழகல்ல.
இனி வரும் நாட்களில் ரசிகர்கள் ஒரு அணி மீதும், ஒரு வீரர் மீதும் வைத்துள்ள அன்பால் மற்ற அணியையோ, ரசிகர்களையோ சீண்டுவதையும், தகாத வார்த்தையால் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.