இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல்-இன் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் வரும் 18ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது. இம்முறை டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, டிக்கெட்டுகளை பே டிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு காலை 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளது. 




அதன் அடிப்படையில், மைதானத்தில் உள்ள கேலரியில், சி,டி,இ ஆகிய கேலரிகளின் லோயர் பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் 1700 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சி,டி,இ ஆகிய கேலரிகளின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் 4 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐ,ஜே,கே கேலரிகளின் கீழ் பகுதியில் இருந்து போட்டியைக் காண விரும்புபவர்களுக்கு ரூபாய் நான்கு ஆயிரத்து ஐநூறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே கேலரியின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் நான்கு ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் கலைஞர் கருணாநிதி கேலரியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் 7,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


டிக்கெட் விற்பனை மற்றும் போட்டியை நேரில் காணும் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்ட வழிமுறைகள்



  • ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும். 

  • டிக்கெட்டுகள் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும். 

  • இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் பார்க்கிங்கிற்காக கலைவாணர் அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம், விக்டோரியா ஹாஸ்டல், சேப்பாக்கம் ரயில்வே நிலையம் மற்றும் PWD முதல் பட்டாபிராம் கேட் வரை நிறுத்த அனுமதி அளிக்கப்படுகின்றது. 

  • மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் எந்த வகையான போதைப்பொருளையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. 

  • ரசிகர்களுக்கு குடிநீர் உள்ளேயே வழங்கப்படும்.