17வது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னர் அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய வீரர் என்றால் அதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸைக் கூறலாம். இதற்கு காரணம் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு வாங்கியது மட்டும் இல்லாமல், ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. 


இவரது தலைமையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி இரண்டு போட்டியில் தோல்வியைச் சந்தித்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஹைதராபாத் அணி ரசிகர்கள் பேட் கம்மின்ஸை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் ரசிகர்களைச் சந்தித்த பேட் கம்மின்ஸை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், மைதானத்தில் உள்ள ரசிகர்களை ஒரு நிமிடம் அமைதியாக்க நாங்கள் முயற்சிப்போம் என கூறியதை செய்து காட்டியது மட்டும் இல்லாமல், உலகக் கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் அமைதியிலும் சோகத்திலும் ஆழ்த்தினார். இதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் பேட் கம்மின்ஸை வரவேற்றபோது பேட் கம்மின்ஸ் ஒரு நிமிடம் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார். 






இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடப்பட்டபோது  பேட் கம்மின்ஸ் பேசிக்கொண்டு இருந்ததை, வீட்டில் இருந்தபடி பார்த்த ரசிகர் ஒருவர், பேட் கம்மின்ஸ்க்கு ஆர்த்தி எடுத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் பாகுபலி படத்தில் வரும் வந்தாய் அய்யா பாடலின் தெலுங்கு வெர்ஷனையும் இணைத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் அந்த ரசிகர் அந்த பதிவில், ”கேப்டன் சார், வீ லவ் யூ அண்ணா” என குறிப்பிட்டுள்ளார்.