17வது ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது அணி பந்து வீசும் என அறிவித்தார். அதன்படி சென்னை அணியின் இன்னிங்ஸை ராஹானேவுடன் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடங்கினார். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ரஹானே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த டேரில் மிட்ஷெல் உடன் இணைந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் பணியினை சிறப்பாக செய்தார். 


பவர்ப்ளேவில் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசுவதில் கவனம் செலுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் லாவகமாக வந்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தார். அதேபோல் உடன் விளையாடிய டேரில் மிட்ஷெல்க்கும் ஸ்ட்ரைக் கொடுத்து வந்தார். 


இவரது விக்கெட்டினைக் கைப்பற்ற ஹைதராபாத் அணி தன்னிடம் இருந்த அனைத்து பவுலர்களையும் பயன்படுத்திப் பார்த்தும் எந்தவிதமான பலனும் கொடுக்கவில்லை. கெய்க்வாட் சிறப்பாக விளையாடி ஒரு ரன், இரண்டு ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்தார். 


அணியின் ஸ்கோர் 126 ரன்களாக இருந்தபோது டேரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது கெய்க்வாட் 61 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 19 ஓவர்கள் முடிந்தபோது ருதுராஜ் 98 ரன்களில் இருந்தார். 20வது ஓவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹைதராபாத் அணியின் முக்கியமான பவுலரான நடராஜன் வீசினார். 20வது ஓவரின் முதல் பந்தினை எதிர்கொண்ட ருதுராஜ் அந்த பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. அடுத்த பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து நிதிஷ் ரெட்டி கையில் சூப்பராக கேட்ச் ஆனது. இதனால் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 98 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் 2 ரன்களில் ருதுராஜ் தனது சதத்தினை தவறவிட்டார். மொத்தம் 54 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் அதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் விளாசியிருந்தார்.