Wasim Akram on Dhoni: பெங்களூரு அணியின் கேப்டனாக தோனி இருந்து இருந்தால் இந்நேரம் அந்த அணி மூன்று கோப்பைகளை வென்று இருக்கும் என பாகிஸ்தன் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 


ஆர்.சி.பி.:


ஐபிஎல் தொடர் தொடங்கும் போது தொடரில் களமிறங்கும் அனைத்து அணிகளும் இந்த முறை நாம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலையில் தான் களமிறங்குவார்கள். ஐபிஎல் விதிகளின் படி  அவ்வப்போது நடைபெறும் ஏலத்தில் சிறந்த வீரர்களை தங்களது அணிக்காக எடுத்து களமிறங்குவார்கள். அணிகளின் மனநிலை இப்படி இருக்க, கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆண்டு தங்களுக்கு பிடித்த அணி கோப்பையை வெல்லும் என நம்பிக்கையோடு இருப்பார்கள்.


அப்படியான நம்பிக்கையில் உள்ள அணியும் ரசிகர்களும் கடந்த 15 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்து ஏமாற்றத்தை மட்டும் சந்தித்த அணிகள் என்றால் அது பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி அணியினர் தான். இதில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணி என்றால் அது பெங்களூரு தான். காரணம் விராட் கோலி எனும் மாபெரும் வீரர் இருப்பது தான். இதனால் இந்த அணி மீது உள்ள எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்க விமர்சனங்களும் வந்தவாறே உள்ளது. 


தோனி மட்டும் இருந்தால்:


இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளதாவது, ”ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள அணி என்றால் அது பெங்களூரு. ரசிகர்களைக் கடந்து உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை அவர்கள் அணியில் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஒரு கோப்பையைக் கூட வென்றதில்லை. அதேபோல், அந்த அணியில் தோனி மட்டும் இருந்திருந்தால் தற்போது அந்த அணியிடம் மூன்று கோப்பைகள் இருந்திருக்கும்” எனக் கூறியுள்ளார். 


பெங்களூரு அணி இதுவரை நடந்து முடிந்துள்ள 15 தொடரில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டும், 2011ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2016ஆம் ஆண்டும் வந்துள்ளது. ஆனால், மூன்று முறையும் தோல்வியைதான் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.