மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஷ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்த எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் அது குறித்து எனக்கு தெரியவில்லை. இப்படியான நேரத்தில் அவருக்கு ஓய்வு தேவை என நான் நினைக்கிறேன். மேலும், அவர் எடுத்துக்கொள்ளும் ஓய்வு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார்படுத்திடவும் உதவும். எனவே ரோகித் மூன்று முதல் நான்கு லீக் போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 


2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்த வெற்றிகள் இந்த சீசனில் மிகவும் தடுமாறிக் கொண்டு இருக்கும் அணிகளான டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தலா ஒரு வெற்றியும், கொல்கத்தா அணிக்கு எதிராக நூலிழையிலும் வெற்றி பெற்றது.


இந்த மூன்று வெற்றிகளைத் தவிர தோல்வி அடைந்த போட்டிகள் அனைத்தும் மிக மோசமான தோல்விகள் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பந்து வீச்சுதான். இது அணியில் சக வீரராகவும் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவிற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.  பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதேபோல் சென்னைக்கு எதிரான போட்டியில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி சென்னை அணியை வான்கடேவில் வீழ்த்த முடியாமல் எடுபடாத பந்து வீச்சினால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 


அதேபோல் கடைசியாக நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இது மும்பை அணியின் பேட்டிங் குறித்த கேள்வியையும் எழுப்புகிறது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை வழநடத்தவுள்ள ரோகித் சர்மா கொஞ்ச காலம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 


மேலும், அவர் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள போட்டிகளில் மிகத் தீவிரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் மட்டும் தான் சாத்தியமாகும். ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சுதான் மிகவும் மோசமானதாகவும் மிகவும் அணிக்கு மிகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது.