ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு  எதிரான போட்டியில், பெங்களூரு அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்ற பெங்களூரு:


ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் லக்னோவில் நடைபெறும் 43வது லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டது. நடப்பு தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில், லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்று இருந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் லக்னோ அணியும் இன்றைய போட்டியில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.


டூப்ளெசிஸ் - கோலி நிதான ஆட்டம்:


பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூப்ளெசிஸ் மற்றும் கோலி களமிறங்கினார். போட்டி நடைபெறும் ஏக்னா மைதானம் முழுமையாக சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததால், இருவருமே அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் திணறினார். இருப்பினும் இந்த கூட்டணி பொறுப்புடன் விளையாடி முதல் வி க்கெட்டிற்கு 62 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து கோலி 31 ரன்கள் சேர்த்து இருந்தபோது, பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


அடுத்தடுத்து விக்கெட்:


அவரை தொடர்ந்து வந்த ராவத்தும், லக்னோவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 9 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் வெறும் 4 ரன்களை சேர்த்து, ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் அட்டமிழந்தார். 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய பிரபுதேசாய், மிஸ்ரா பந்துவீச்சில் வெறும் 6 ரன்களுக்கு நடையை கட்டினர். இவ்வாறு அடுத்தடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் கேப்டன் டூப்ளெசி நிலைத்து நின்று ரன் சேர்த்தார். இதனிடையே, மழை குறுக்கிட்டதால் சுமார் 25 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.


டூப்ளெசி அவுட்:


பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டூப்ளெசி 44 ரன்கள் சேர்த்து இருந்தபோது, அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் மட்டுமே அடங்கும். அவரை தொடர்ந்து லோம்ரோரும் 3 ரன்களில் நடையை கட்டினார். சற்றே நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் 16 ரன்களை மட்டுமே சேர்த்து ரன் - அவுட்டானார்.


லக்னோ அணியின் இலக்கு:


சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை லக்னொ அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


கே.எல். ராகுல் காயம்:


இதனிடையே பவுண்டரி ஒன்றை தடுக்க முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த லக்னோ கேப்டன் கே.எல். ராகுலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், வலி தாங்க முடியாமல் துடித்த அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, அவர் பேட்டிங் செய்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.