16வது ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் 8வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.


16வது ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளது. 


இதில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெறுகிறது. கௌகாத்தி இரு அணிகளுக்குமே உள்ளூர் மைதானம் இல்லை என்ற போதிலும், இது ராஜஸ்தான் அணிக்கான ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. 


இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை


ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து அந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி மிரட்டியது. இது இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பஞ்சாப் அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறையில் கொல்கத்தா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணி பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்த போட்டியில் வெற்றி நிச்சயம். இந்த 2 அணிகளும் தங்களது 2வது வெற்றியை நோக்கி நகரும் என்பதால் இப்போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 


ராஜஸ்தான் அணி: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.


பஞ்சாப் அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் கரண், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.


மைதானம் எப்படி? 


கௌகாத்தி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திகழும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை ஐபிஎல் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.  இதுவரை இம்மைதானத்தில் 3 ஒருநாள் போட்டிகளும், 6 டி20 போட்டிகளும் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணியே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது 


தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்? 


ராஜஸ்தான் அணியில் துருவ் ஜூரல், சந்தீப் ஷர்மா, குல்தீப் சென், முருகன் அஷ்வின் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகிய வீரர்களும், பஞ்சாப் அணியில் ரிஷி தவான், ஹர்ப்ரீத் சிங், மோஹித் ரதீ, அதர்வா டைடே மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.