MS Dhoni in IPL:  தோனி என்னைப்போல் பல மில்லியன் மக்களுக்கு ஹீரோவைப்போல் காணப்படுகிறார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


இதற்கு முன்னர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோதும் பட்லர் இவ்வாறுதான் கூறீனார். அதாவது,  என்னுடைய ஹீரோ மற்றும் உலகம் முழுவதும் இன்னும் பல மில்லியன் மக்களின் ஹீரோவான உங்களுக்கு வாழ்த்துகள்.  சர்வதேச கிரிக்கெட்டில் உங்களுக்கு எதிராக விளையாடியது எனக்கான மரியாதையாக கருதுகிறேன்," என பட்லர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல், இதுதான் சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என பலரும் கூறிவந்தனர். அதற்கு ஏற்றவகையில் சென்னை அணியின் போட்டிகள் அனைத்திலும், தோனியின் ரசிகர்கள் மைதானத்தினை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கான டாஸின்போது தோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நீங்கள் தான் இது என்னுடைய கடைசி சீசன் என கூறிவருகிறீர்கள், நான் அப்படி கூறவில்லையே என கூறியுள்ளார். தோனியின் இந்த பதில், சென்னை அணி நிர்வாகத்திற்கு மட்டுமில்லாது சென்னை அணியின் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரசிகர்கள் மத்தியிலும் ஐபிஎல் வர்ணனையாளர்கள் மத்தியிலும் இது தான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என தோனியைப் பற்றி பேசும்போது எல்லாம் கூறிவந்தனர். ஆனால் சென்னை அணி சார்பில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை. சென்னை அணியின் வீரர், மொயின் அலி கூட தோனி இன்னும் இரண்டு சீசன் விளையாடுவார் என கூறியிருந்தார். அதேபோல் சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் செய்தியாளார்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ தோனி டிரெஸ்ஸிங் ரூமில் ஓய்வு குறித்து பேசவேயில்லை’ என கூறியிருந்தார். 


கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை ஈடன் கார்டன் மைதானத்தில் வென்ற பிறகு பேசிய தோனி,  “மிகப்பெரிய எண்ணிக்கையில் அவர்கள்(ரசிகர்கள்) வந்துள்ளனர். அவர்கள் எனக்கு ஃபேர்வெல்(பிரியாவிடை) தர முயற்சிக்கின்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு மிக்க நன்றி. அவர்களது ஆதரவுக்கு மிக்க நன்றி கூறுகிறேன். அடுத்த முறை ஏராளமானோர் கொல்கத்தா ஜெர்சியில் வருவார்கள்” இவ்வாறு  கூறினார்.


41 வயதான தோனி இதுவரை 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 52 ரன்களை விளாசியுள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் தோனி 84 ரன்களை விளாசியுள்ளார். ஐ.பி.எல். மட்டுமின்றி இந்திய அணிக்காகவும், சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பினிஷராக தோனி திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.