IPL 2023 Mohsin Khan: லக்னோ அணி தனது ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளதென்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்து வீச்சாளரான மோஹ்ஷின் கான் தான். ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் இறுதியில் நடக்கவுள்ள குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. இந்த ஐபில் தொடர் இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரினைப் போல் பல்வேறு வீரர்களை அடையாளப்படுத்தியுள்ளது. அதேபோல், பலர் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்தும் மனம் திறக்க வைத்துள்ளது. வெளி உலகிற்கு தெரியாத பல கொண்டாடமான மகிழ்ச்சியான நினைவுகளை நமக்கு வெளிக்காட்டியுள்ளது. 


அவ்வகையில் நேற்று முந்தினம்  அதாவது மே மாதம் 16ஆம் தேதி, நடைபெற்ற லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் லக்னோ அணி தனது ப்ளேஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் 20 ஓவரை வீசிய லக்னோ அணியின் பந்து வீச்சாளர் மோஹ்ஷின் கான். கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சிறப்பாக பந்து வீசிய மோஹ்ஷின் கான் அந்த ஓவரில் இரண்டு டாட் பந்துகளை வீசியது மட்டுமில்லாமல் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த வெற்றிக்குப் பின்னர், பேசிய மோஹ்ஷின் கான் தனது கடந்த காலம் குறித்து பகிர்ந்து கொண்டார். 


எனது உடலில் ஏற்பட்ட பிரச்சனை , கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது. எனது தமனி முழுவதுமாக அடைக்கப்பட்டதால் இது வித்தியாசமான உடலியல் பிரச்சனையானது. எனது கையில் நரம்புகள் முற்றிலும் செயல்படாமல் தடைபட்டன. லக்னோ அணி நிர்வாகம், ராஜீவ் சுக்லா , கவுதம் கம்பீர், எல்.எஸ்.ஜி. உரிமையாளர், சஞ்சீவ் , என் குடும்பம் என  அனைவரும் என்னை ஆதரித்தனர்."


"எனது காயத்திற்கு அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும், நான் மிகவும் சிரமப்பட்டேன், அது எனக்கு கடினமான நேரம். ஒரு கட்டத்தில் என் கையை தூக்க முடியாததால், கிரிக்கெட் விளையாடும் நம்பிக்கையை இழந்துவிட்டேன்” என்றார். 


மொஹ்சின் தனது காயத்தின் அளவை விரிவாகக் கூறினார், மேலும் அதைப் பற்றி நினைத்தால் இன்னும் பயமாக இருப்பதாக கூறினார். 24 வயதான அவர் கூறியவற்றில் நம்மை அதிகம் பயப்படவைக்கும் உண்மை என்னவென்றால், ஒருவேளை அவர் சிகிச்சை பெற தாமதமானால், அவரது கையை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் என்று அவரது மருத்துவர் அவரிடம் கூறினார் என கூறியதுதான்.