ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


குஜராத் - கொல்கத்தா மோதல்:


ஐபிஎல் தொடரில் இன்றைய முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை, ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், மழை குறுக்கிட்டதன் காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகவே இந்த போட்டி தொடங்கியது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் இன்றைய போட்டியில் குஜராத் அணி களமிறங்கியது.


அடுத்தடுத்து விக்கெட்:


இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டக்காரரான ஜெகதீஷன்  வெறும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஷர்தூல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஷமி வீழ்த்தினார். இதனால் 47 ரன்களை சேர்ப்பதற்குள் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


குர்பாஸ் அதிரடி:


மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ், குஜராத் பந்துவீச்சை பதம் பார்த்தார். சீரான இடைவெளியில் சிக்சர் மற்று பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் வெறும் 27 பந்துகளில் குர்பஸ் அரைசதம் கடந்தார். இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ராணா வெறும் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஆனாலும், குர்பாஸ் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 12.1 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது.


குர்பாஸ் அவுட்:


அதிரடியாக விளையாடி வந்த குர்பாஸ் 81 ரன்களை குவித்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரை தொடர்ந்து 19 ரன்கள் எடுத்து இருந்தபோது ரிங்கு சிங் பெவிலியன் திரும்பினார். கொல்கத்தா அணிக்காக 100வது போட்டியில் களமிறங்கிய ரஸல், இறுதிக்கட்டத்தில் சற்றே அதிரடி காட்டினார்.


குஜராத் அணிக்கான இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. இந்த இலக்கை குஜராத் அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்