உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் கவனிக்கப்படும் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் ஒன்று. கடந்த மார்ச் மாத இறுதியில் இதன் 16வது சீசன் மிக கோலாகலமாக தொடங்கப்பட்டது. அதில் சென்னை லக்னோ அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. 




அதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னையின் தொடக்க ஜோடியான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக ருத்ராஜ் வானவேடிக்கை காட்டினார். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை அணி தனது ரன் வேட்டையை கைவிடாமல் பார்த்துக்கொண்டது. 



அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே, அதில் ஒரு சிக்ஸர் 102 மீட்டர்களுக்கு பறக்கவிட்டார். விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் சென்னை அணி ரன் வேட்டையை மட்டும் நிறுத்த வில்லை. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் களமிறங்கி மூன்று பந்துகளை எதிர்கொண்ட தோனி அடுத்ததடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.  லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 



அதன் பின்னர் களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. லக்னோ அணி பவர்ப்ளேவில் மட்டும் ஒரு விக்கெட்டை இழந்து 80 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.  கெய்ல் மேயர்ஸ் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் சென்னை அணியின் சுழலுக்கு லக்னோ அணி தனது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தத்தளித்தது. ஆனாலும் ரன்ரேட் சீராக இருந்தது. லக்னோ அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து இருந்தது. 

 

இறுதி ஐந்து ஓவர்களில் லக்னோ அணிக்கு வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் சிக்ஸ அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 12  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் சென்னை அணி தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. சென்னை அணி சார்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளும் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.