IPL 2023, CSK vs KKR Match Highlights: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதியாக விளையாடுகிறது. இதனால் மைதானம் முழுவதும் சென்னை ரசிககர்கள் நிரம்பி வழிந்தனர். 


சென்னை அணியின் இன்னிங்ஸை வழக்கம் போல் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே தொடங்கினர். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவுள்ளது என நினைக்கும் போது கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளாரான வருண் சக்ரவர்த்தி ருத்ராஜின் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் வந்த ரஹானே பவர்ப்ளே வரை தாக்குப்பிடிட்த்தார். 7வது ஓவரில் தொடங்கி 11வது ஓவர் வரை சென்னை அணியின் வீரர்கள் மைதானத்துக்கு வருவதும், வெளியேறுவதுமாக இருந்தனர். 


இதனால் சென்னை அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் கைகோர்த்த டூபே மற்றும் ஜடேஜா சென்னை அணியை மெல்ல மெல்ல மீட்டனர். 17வது ஓவரில் 100 ரன்களை எட்டிய சென்னை அணி அந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் விளாசி அசத்தியது. இதனால் சென்னை அணியின் ரன்ரேட் சீராக உயரத் தொடங்கியது.  ஆனால் மீண்டும் இறுதி ஓவர்களில் கொல்கத்தா அணி சிறப்பாக பந்து வீசியதால் சென்னை அணியால் ரசிகர்கள் எதிர்பர்த்த ரன்களை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி சார்பில் டூபே மட்டும் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் சார்பில் வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். 


அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி பவர்ப்ளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது. மோசமான தொடக்கத்தினால் தத்தளித்த கொல்கத்தா அணியை கேப்டன் ராணா மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் மீட்க தொடங்கினர். இவர்களது கூட்டணியை பிரிக்க சென்னை அணி எவ்வளவோ முயற்சி செய்தும் இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. 


11வது ஓவரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பத்திரனா தவறவிட்டது சென்னை அணிக்கு மிகவும் தாக்கத்தினை ஏற்படுத்தியது எனலாம். சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் மற்றும் ராணா அடுத்தடுத்து தங்களது அரைசத்தினை பூர்த்தி செய்தனர். போட்டியின் 18வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் இந்த ரன் - அவுட் கொல்கத்தாவின் வெற்றியை பாதிக்கவில்லை. இறுதியில் கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் தனது ப்ளேஆஃப் வாய்ப்பினை தக்கவைத்துள்ளது. சென்னை அணியின் தோல்வியால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.