ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் தொடங்கியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த டெல்லி, 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது.


எளிதான இலக்கி நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு, ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினர். மூன்றாவது ஓவரிலேயே கலீல் அகமது பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ப்ரித்வி ஷா. அவரைத் தொடர்ந்து ஒன் - டவுன் களமிறங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர்.


ஸ்ரேயாஸ் - தவான் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. 52 ரன்களுக்கு சேர்ந்து நின்றது இந்த இணை. ரஷித் கானின் துல்லிய பந்துவீச்சால் தவானின் விக்கெட் சரிந்தது. 42 ரன்கள் எடுத்திருந்த தவான் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பண்ட் களமிறங்கினார்.  பண்ட்- ஸ்ரேயாஸ் இணை நிதானமாகவும், கிடைத்த கேப்பில் பவுண்டரிகளையும் அடிக்கவிட்டு ரன் சேர்த்தனர். எனினும், 17.5வது ஓவர் வரை நீடித்த போட்டியில், 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. 


முதல் இன்னிங்ஸ் ஹைலைட்ஸ்


சொதப்பிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்:


அதிக எதிர்ப்பார்ப்புடன் வார்னர் ஓப்பனிங் களமிறங்கினார். ஆனால், நார்ட்ஜே வீசிய முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆகி வெளியேறியது ஹைதராபாத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், முதல் ஓவரிலேயே கேப்டன் கேன் களமிறங்கிய வேண்டிய கட்டாயம். நிதானமாக விளையாடி வந்த சாஹா, வில்லியன்சன் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. ரபாடா ஓவரில் சாஹாவும் அவுட்டாக, இரண்டு முறை வில்லியம்சனின் கேட்ச் மிஸ் ஆனது, ஆனால் மூன்றாவது முறை அக்சர் படேல் பந்துவீச்சில் ஹெட்மேயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 


வரிசையாக அவரைத் தொடர்ந்து, பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், 100 ரன்களை எட்டவே ஹைதராபாத் அணி திணறியது. கடைசி நம்பிக்கையாக ஜேசன் ஹோல்டர் ரன் எடுத்து கரை சேர்ப்பார் என நினைத்தபோது, அவரும் 10 ரன்களில் வெளியேறினார். 


காஷ்மீரைச் சேர்ந்த 19 வயதேயான இளம் வீரர் சமத், ரஷித் கான் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். சொதப்பலான ஸ்கோராக இருந்தபோதும், சமத் நம்பிக்கையாக ஆடினார். அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டுமென இருவரும் விளையாடினர். ஒரு சிக்சர் அடித்த அவர், ரஷித் கானுடன் சேர்ந்து சிங்கிள்ஸ், டபுள்ஸ் எடுத்தார்.இதனால் 18-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது ஹைதராபாத் அணி. அதனை தொடர்ந்து, ரபாடாவின்ன்விக்கெட்  வேட்டைக்கு சமத்தும் சிக்கி கொள்ள, 28 ரன்களில் வெளியேறினார். இந்த இன்னிங்ஸில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்கோர் இது. 7 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த நிலையில், கடைசியில் 2 ரன் அவுட்டுகளால் விக்கெட்டுகள் சரிந்தது.


130 - 140 ரன்களை எட்டினால், இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லியை சுருட்ட வாய்ப்புள்ளது. ஆனால், 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்தது ஹைதராபாத் அணி.


டெல்லி அணி பவுலிங் சூப்பரா அல்லது ஹைதராபாத் அணியின் பேட்டிங் மிக சுமாரா என பார்த்தால், நிச்சயம் ஹைதராபாத்தின் பேட்டிங்கைதான் சுட்டிக்காட்ட வேண்டும். ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடது போல இருந்தது.  


இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில், இலக்கை எட்டி, வெற்றி பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் 2 புள்ளிகள் பெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.