ஐபிஎல் சீசன் 14:


ஐ.பி.எல் 2024 இன் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, அடுத்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் கட்டாய வெற்றியினை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணி வெளியேற்றப்பட உள்ளது. ஏனெனில் இன்று தோல்வியடைந்த அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.


அரைசதம் விளாசிய கோலி - படிதார்:


இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கினார்கள். இதில்  ஃபாஃப் டு பிளெசிஸ் 7 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 2 பவுண்டரிகள் விளாசி 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வில் ஜாக்ஸ் விராட் கோலியுடன் இணைந்தார். இவரும் 7 பந்துகள் மட்டும் தான் களத்தில் நின்று 12 ரன்கள் எடுக்க பின்னர் களம் இறங்கினார் ரஜத் படிதார். 43 ரன்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.


இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூலம் ஐபிஎல் போட்டியில் இன்று அறிமுகவீரராக களம் இறங்கிய வித்வித் கவேரப்பா எடுத்து அசத்தினார். இதனிடையே விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்த இவர்கள் பெங்களூரு அணிக்கு வேகமாக ரன்களை சேர்த்தது. அப்போது தன்னுடைய அரைசதத்தை 21 பந்துகளில் பதிவு செய்தார் படிதார். மொத்தம் 23 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி 55 ரன்களை குவித்தார்.  


10 ஓவர்கள் முடிந்த போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த சமயத்தில் தரம்சாலா மைதானத்தில் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இதானால் சிறிது நேரம் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் 8.55 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது களத்தில் நின்ற விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கேமரூன் கிரீன். இவர்களது ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது சதம் அடிப்பார் விராட் கோலி என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 92 ரன்கள் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.


இதனிடையே கேமரூன் கிரீனும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஹர்சல் படேல்  3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.