மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் முடிவுக்கு எதிராக தோனியின் ரிவ்யூ வென்றதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


நடப்பு ஐபிஎல் தொடரின் 12 வது ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி தொடக்கத்தில் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இவர்களை 4வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே பிரித்தார். அவரின் பந்து வீச்சில் 13 பந்துகளில் 21 ரன்கள் அடித்த ரோகித் சர்மா ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். 


இதன் பின்னால் மும்பை அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. அந்த அணி பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இஷான் கிஷன் 32 ரன்களில் வெளியேற சூர்ய குமார் யாதவ் உள்ளே வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் இருந்தது. 






இதனைத் தொடர்ந்து 8வது ஓவரை மிட்செல் சாண்ட்னர் வீசினார். அப்போது அவரது பந்துவீச்சை சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் செய்ய முயன்றார். அப்போது பந்து அவரது கையுறையில் பட்டு தோனியின் கையில் சிக்கியது. உடனடியாக அவுட் கேட்க, அம்பயர் மறுத்ததோடு வைடு எனவும் அறிவித்தார். சற்றும் யோசிக்காத தோனி உடனடியாக ரிவ்யூ சென்றார். இதில் ரீப்ளேவில் பந்து சூர்யகுமாரின் கையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. 


தோனியின் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வைரலானது. சிலர் ‘கிரிக்கெட்ல DRS ரிவ்யூ தப்பாகலாம்.. ஆனால் தோனி ரிவ்யூ தப்பாகாது’ என அவரது டிஆர்எஸ் முடிவை பாராட்டியுள்ளனர். DRS என்பது Decision Review System என ஒரு அர்த்தம் உள்ள நிலையில் தோனி ரசிகர்களுக்கு மட்டும் அது Dhoni Review System ஆக உள்ளது.  


இந்த போட்டியில் மும்பை அணி தனது இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த சென்னை அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து  வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 2வது வெற்றியாகும். அதேபோல் 2 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி இரண்டிலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.