அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்து. மொத்தமாக 991 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களோடு, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து இருந்தனர். 


பலரும் எதிர்பார்த்தபடியே, ஆல்ரவுண்டர்களான சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக்ஸ் ஆகியோர் அதிகபட்ச தொகைக்கு,  முறையே பஞ்சாப், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேநேரம், நட்சத்திர வீரர்கள் உட்பட பல வீரர்களும் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.


சாம் கர்ரனை தேர்வு செய்யலாம் என சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி செய்தது. எனினும், அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் குதித்தது. இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் சாம் கர்ரன் மிக அதிக விலைக்கு ரூ.18.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.






பின்னர், பென் ஸ்டோக்சை சிஎஸ்கே ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ஏலத்தில் தேர்வு செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தோனிக்கு பதிலாக ஸ்டோக்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். 


இதுதொடர்பாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ஸ்டோக்ஸை அணியில் சேர்த்த பிறகு தோனி கூறியது குறித்து ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொண்டார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:
பென் ஸ்டோக்சை ஏலத்தில் வாங்கியதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். எம்.எஸ்.தோனியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு சிஎஸ்கே அணியில் இருக்கிறது. ஆனால், அதுகுறித்த முடிவை எம்.எஸ்.தோனி தான் எடுப்பார்.


ஒரு ஆல்-ரவுண்டர் அணிக்கு தேவையாக இருந்தார். பென் ஸ்டோக்ஸ் கிடைத்துவிட்டார். இந்த சீசனில் சிஎஸ்கே சிறப்பாகச் செயல்படும் என்று நம்புகிறோம்" என்றார் காசி விஸ்வநாதன்.


கடந்த ஐபிஎல் சீசனில் ஜடேஜாவை கேப்டனாக சிஎஸ்கே நியமித்தது. ஆனால், அவரால் அழுத்தம் காரணமாக செயல்படமுடியவில்லை. இதையடுத்து, தோனியே கேப்டன் பொறுப்பை மீண்டும் எடுத்துக் கொண்டார்.