2004 ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான எம்.எஸ். தோனி, கடைசியாக நடந்த 2019 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தேர்வானபோதும் தனது விருப்பத்தின்பேரில் தொடரில் இருந்து விலகினார். 





அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளை, 2020 ஆகஸ்ட் 15ம் தேதி இரவு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். அட என்னப்பா இது, 3 ஐ.சி.சி. வென்று கொடுத்த கேப்டனுக்கு ஒரு பேர்வெல் கூட இல்லையே என்று ரசிகர்கள் ஏங்கினர். இது இல்லை என்றால் என்ன? ஐ.பி.எல். தொடரில் தோனி ஓய்வு பெறும்போது அவருக்கு மிகப்பெரிய கெளரவம் கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். 






ரசிகர்கள் மனதை நன்றாக அறிந்துகொண்ட தோனி, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. அதனால்தான் தோனி இன்றுவரை ஓய்வுபெற முடியவில்லை என்றும் கூறப்பட்டது. 


மேலும், தோனி போகும்போதும் சிறந்த தலைமையை சி.எஸ்.கே. அணிக்கு கொடுத்துவிட்டு செல்வார் என்ற நம்பிக்கையில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில போட்டிகளுக்கு பிறகு மீண்டும் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதனால்தான் ஜடேஜாவுக்கு சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கருத்து பரவி வருகிறது. 






இந்தநிலையில், சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 வருடங்களாக பல்வேறு வெற்றிகளை பெற்று மிக சிறப்பாக ஆடி வருகிறது. கடந்த வருடம் சென்னையில் போட்டி நடக்கவில்லை என்பதில் எங்களுக்கும் சோகம் இருக்கிறது.


அடுத்த வருடம் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்புகிறது. முன்பு எப்படி உங்கள் அன்பால் எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ.. அதேபோல் தொடர்ந்து தாருங்கள். தோல்வியின் போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது.” என்று தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.