கொரோனா பரவல் காரணமாக, 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், முதல் பாதி முடிவில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட். 


ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஐபிஎல் முதல் பாதி முடிவில் டேபிள் டாப்பராக முதல் இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகள் விளையாடியுள்ள டெல்லி, பஞ்சாப் அணிகளில், 6 போட்டிகளை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, 3 போட்டிகளில்  மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 






சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரு அணிகளும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை முன்னிலைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பெங்களூர் மூன்றாம் இடத்தில் உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில், 4 போட்டிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. 


ஐபிஎல் 2020 முதல் பாதி முடிவில், ராஜ்ஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி நான்கு இடத்தைப் பிடித்துள்ளது. இதில், ராஜ்ஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 3 வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.  இரண்டு போட்டிகளில் மட்டும் வென்று கொல்கத்தா அணி ஏழாவது இடத்திலும், ஒரே ஒரு வெற்றியுடன் ஹைதராபாத் அணி எட்டாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளன. 


செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கும் இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், டாப் நான்கில் இடம் பிடிக்கப்போகும் அணிகள் யாவை என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


மேலும் படிக்க: ப்ளூ ஜெர்ஸியில் திங்கட்கிழமை இறங்கும் ஆர்சிபி- காரணம் என்ன?