இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் தற்போது பாகிஸ்தான் அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக, சென்னையில் நடைபெற்று வரும் ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபிக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி அந்நாட்டு அமைச்சகத்திடம் அனுமதி பெற்று விளையாடி வருகிறது. அதேபோல், இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் அனுமதி வாங்கிவிட்டது. 


ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் தேசிய ஹாக்கி அணிக்கு NOC (ஆட்சேபனை இல்லை) வழங்கப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ஹாக்கி அணியில் இன்னும் மூன்று பேர் இன்னும் NOC களைப் பெறவில்லை மற்றும் அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ஹாக்கி அணி, பிசியோ இல்லாமல் வந்துள்ளது. அப்போது, ராஜ்கமல் என்ற பிசியோவை பாகிஸ்தான் அணி கடைசி நிமிடத்தில் தேடி கண்டுபிடித்து தங்கள் அணியுடன் இணைத்து கொண்டது. 


இதுகுறித்து இந்தியன் பிசியோ ராஜ்கமல் தெரிவிக்கையில், “பாகிஸ்தான் அணியின் முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பு அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். இருப்பினும், எந்தவொரு பாகுபாடின்றி ஏற்று கொண்டேன். எங்களுக்குள் இதுவரை மொழி பெரியளவில் தடையாக இல்லை. நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுகிறேன், நாங்கள் ஒருவருக்கொருவர் மொழிபெயர்த்து தொடர்பு கொள்கிறோம். நான் எப்பொழுதும் இந்தியனாகவே இருப்பேன், ஆனால் போட்டியின் நாளில், எந்த காயமும் இல்லாமல் ஆட்டத்தில் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களைப் பற்றி மட்டுமே நான் நினைக்கிறேன். 


ஒரு பிசியோவாக, நீங்கள் குழப்பமான காயங்களுக்கு தயாராக இருக்க வேண்டும், மோதல்கள் மூலம் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், எதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்றார். 


பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷானாஸ் ஷேக் இல்லாத நிலையில், துணை பயிற்சியாளர் முஹம்மது சக்லைன், ராஜ்கமலை பற்றி பேசினார். அப்போது அவர், ராஜ்கமல் தற்போது எங்களுக்கு கடவுள் மாதிரி. எங்கள் அணிக்காக எந்தவித பாகுப்பாடும் இன்றி சிறப்பாக செயல்படுகிறார். இவர் ஒரு உலகத் தரம் வாய்ந்தவர்” என்றார். 


யார் இந்த ராஜ்கமல்..?


சென்னையைச் சேர்ந்த ராஜ்கமல், 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்போர்ட்ஸ் பிசியோவாக பணியை தொடங்கினார். தற்போது, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் அணியான நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக ராஜ்கமல் கடந்த மூன்று சீசன்களில் பணியாற்றியுள்ளார். 


கிரிக்கெட், ஹாக்கியை தவிர இவர், ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கும் பிசியோவாக இருந்துள்ளார்.


ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு போட்டியும் நடைபெற உள்ளது. இந்த போட்டி ஆகஸ்ட் 9ம் தேதி நடக்கிறது.