இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13-ஆம் தேதி கொழும்புவில் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றதால் இலங்கை தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி செல்ல உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.






இந்திய அணி ஜூலை 13,16,18 ஆகிய தேதி ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஜூலை 21,23,25 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.கொரோனா பரவல் காரணத்தால், சில தினங்களுக்கு முன்னரே இலங்கை சென்ற இந்திய அணி வீரர்கள், தனிமைப்படுத்தப்பட்டனர்.


இந்நிலையில், இலங்கை அணியைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், திட்டமிட்டபடி போட்டி தொடங்குவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியைச் சேர்ந்த உதவியாளர் நிரோஷன், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளார் ஆகியோருக்கு டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.






இதனால், ஜூலை 13-ம் தேதி தொடங்க இருக்கும் போட்டி, ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுவரை, இலங்கை மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்படாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.


போட்டிகள் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில்,


முதல் ஒரு நாள் போட்டி - ஜூலை 17,


இரண்டாவது ஒரு நாள் போட்டி - ஜூலை 19, 


மூன்றாவது ஒரு நாள் போட்டி - ஜூலை 21. 


முதல் டி-20 போட்டி - ஜூலை 24,


இரண்டாவது டி-20 போட்டி - ஜூலை 25,


மூன்றாவது டி-20 போட்டி - ஜுலை 27 ஆகிய தேதிகள் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.