இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மதியம் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்த காரணத்தாலும், வானிலை மந்தமாக இருப்பதாலும் பந்துவீச்சு நன்றாக எடுபடும் என்று ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் போட்ட சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தொடங்க தாமதமானது. இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தின் 3 நச் மொமெண்ட்ஸ் இதோ!


ரோஹித் - ராகுல் பார்ட்னர்ஷிப்


மழை நின்று போட்டி தொடங்கியபோது, களத்தில் இறங்கிய இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் முதல் 10 ஓவர்களில் பெரிதாக சோபிக்கவில்லை. 10 ஓவர்களின் முடிவில் இந்தியா 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 126 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்றது இந்த இணை. 2010-ம் ஆண்டிற்கு பிறகு, ஆசியாவிற்கு வெளியே 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கும் இந்தியாவின் முதல் ஓப்பனிங் இணையானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் இன்னிங்ஸ் சுமாராக இருந்து வந்த நிலையில், நேற்றைய போட்டியில் நிதானமாக ரன் சேர்த்தார். 






தொடரும் புஜாராவின் சொதப்பல்


சாம் கரன் வீசிய 15வது ஓவரில், 4 பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார் ரோஹித். ஒரு கட்டத்தில் ரோஹித் அதிரடி காட்ட, ராகுல் நிதானமாக ஆட என இந்திய அணி ஸ்கோர் செய்து கொண்டிருந்தது. இரு வீரர்களும் அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடினர், 83 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் அவுட்டாகினார். இந்த பார்டனர்ஷிப் ஆறுதல் அளித்திருந்தாலும், புஜாராவின் ஃபார்ம் கவலையை கொடுத்தது. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா, கடைசி 10 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். 






ஒன் - டவுன் களமிறங்கும் புஜாரா சொதப்பி வருவதால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கூடுகிறது. இதனால், அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்க்க தொடங்கினார். 40 ரன்கள் கடந்திருந்த நிலையில், கோலி அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 42 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார் கோலி. 


ராகுலின் செஞ்சுரி!



முதல் நாள் ஆட்டத்தில் 238 பந்துகளை எதிர்கொண்ட ராகுல், 1 சிக்சர் 11 பவுண்டரிகள் உட்பட127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். 2015-ம் ஆண்டில் இருந்து ஆசியாவுக்கு வெளியே விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு ஓப்பனிங் களமிறங்குபவர்களால் 4 செஞ்சுரிகள் அடிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு செஞ்சுரிகளுமே ராகுல் அடித்தது. இரண்டு முறை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா ஒரு முறையும் செஞ்சுரி அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் செஞ்சுரி அடித்ததால், 2021-22 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சதம் அடித்த முதல் வீரரானார். மேலும், வினு மங்கட், ரவி சாஸ்திரி ஆகியோரைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் செஞ்சுரி அடித்த மூன்றாவது ஓப்பனிங் பேட்ஸ்மேனானார். இதனால், லார்ட்ஸ் ஹானர் போர்டில் ராகுலின் பெயர் பொறிக்கப்பட உள்ளது. 


அடித்து நொறுக்கவும் ராகுல்!


முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. ராகுல் (127*) மற்றும் ரஹானே (1*) ஆகியோர் களத்தில் உள்ளனர்.