இந்தியா - ஜிம்பாப்வே:


ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. அதேபோல் மூன்றாவது போட்டியிலும் ஜிம்பாப்வே அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இந்நிலையில் இன்று (ஜூலை 13) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் 4 வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகல் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரராக வெஸ்லி மாதேவேரே மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினார்கள்.


இருவரும் அந்த அணிக்கு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அதன்படி, 63 ரன்கள் வரை இவர்களது ஜோடி களம் ஆடியது. இதில் தடிவானாஷே மருமணி 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் வெஸ்லி மாதேவேரே 25 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்தாக வந்த பிரையன் பென்னட் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சிறப்பாக விளையாடினார். இதனிடையே ஜொனாதன் காம்ப்பெல் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.


இந்திய அணி வெற்றி:


இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 152 ரன்கள் எடுத்து. இந்திய அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.


கடைசி வரை களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 93 ரன்கள் எடுத்தார். அதேபோல் சுப்மன் கில் 39 பந்துகள் களத்தில் நின்று 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 58 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இவ்வாறாக இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.