லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இன்றைய போட்டியின் முதல் நாளில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஷர்துல் தாகூரின் அரை சதங்கள் அணியின் ஸ்கோரை 200-க்கும் நெருக்கமாக கொண்டு செல்ல உதவியது. 






முதல் இன்னிங்ஸில், கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தனர். டாப் ஆர்டர் சொதப்பவே, மிடில் ஆர்டர் களமிறங்கிய பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்த போட்டியில், புஜாரா வழக்கம் போல் 4 ரன்களுக்கு ஆண்டர்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் புஜாராவை அவுட் செய்ததன் மூலம் அவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 முறை ஆண்டர்சென் அவுட் செய்துள்ளார். 


டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் சரிந்த நிலையில் டெயில் எண்டராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்து அசத்தியுள்ளார்.3 சிக்சர், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டாகினார் ஷர்துல் தாகூர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டி20 போட்டியைப் போல விளையாடிய ஷர்துல், இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.


ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.


இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.