15வது ஹாக்கி உலக கோப்பை தொடர் வருகின்ற ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி 29 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 


இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கும். அதேபோல், இந்திய ரசிகர்கள் பார்வையும், ஏக்கமும் அதிகரித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ’டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் போன்ற வலுவான அணிகளும் உள்ளது. 


இதையடுத்து, உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. 


ஊக்கத்தொகை அறிவிப்பு:


இந்தநிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஹாக்கி இந்தியா அமைப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. 


அதன்படி, ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மகுடம் சூடினால் ஒவ்வொரு வீரர்களும் தலா ரூ. 25 லட்சமும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வெள்ளிப்பதக்கம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சமும், உதவியாளர்களுக்கு 3 லட்சமும் வழங்கப்படும் என்றும், வெண்கலப்பதக்கத்தை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா 2 லட்சமும் அளிக்கப்படும் என ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 


இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறுகையில்,” சீனியர் உலகக் கோப்பை போட்டியின் பதக்க மேடையில் ஏறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த ஊக்கத்தொகையானது வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பதக்கம் வெல்லும்போது நிச்சயம் அது நமது வீரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். அவர்கள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட எங்களது வாழ்த்துகள்” என தெரிவித்தார். 


இந்தியா கடைசியாக கடந்த 1975 ம் ஆண்டு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை வென்றது. அதன்பிறகு, இந்திய ஹாக்கி அணி இதுவரை எந்தவொரு பட்டத்தை வென்றதில்லை. 


இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 1971 ம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1975 ம் ஆண்டு பட்டத்தையும், 1973 இல் ஆம்ஸ்டெல்வீனில் வெள்ளிப் பதக்கத்தைப் பதிவு செய்தது.  


ஹர்மன்பிரீத் சிங்: 


ஜனவரி 13 முதல் ஒடிசாவில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு டிஃபென்டர் ஹர்மன்ப்ரீத் சிங் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிஃபென்டர் அமித் ரோஹிதாஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹர்மன்பிரீத் கேப்டனாக இருந்தார். இதில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்த மன்பிரீத் சிங், வீரராக அணியில் இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.