தங்களது குழந்தைகள் நல்ல கல்வி பெற்று, வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று கஷ்டப்படும், அதற்காக மெனக்கிடும் பெற்றோர்களை பார்த்திருப்போம். ஆனால், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத தங்களது கிராமத்தை சேர்ந்த அனைத்து ஏழை எளிய மாணவர்களும் கல்வி, விளையாட்டு, தனித்திறனில் சாதித்து, தங்களது உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும், என ஒரு கிராமமே முனைப்புடன் செயல்பட்டு வருவது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சூனாம்பேடு கிராமத்தில் முன்னாள் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் இணைந்து, கிராம வளர்ச்சி மையம் மற்றும் கிராம மேம்பாட்டு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்களது கிராமத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு இரவு பாடசாலை, சிலம்ப பயிற்சி, விளையாட்டு போட்டிகள் மற்றும் தனித்திறன் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் அந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுப் பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த இரவு பாடசாலையில், அதே கிராமத்தில் படித்து ஆசிரியையாக பணிபுரிந்து வரும் விஜயலட்சுமி, இளங்கொடி, பிரியங்கா ஆகியோர், மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். இங்கு 45க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.


,

 

கிராமத்தில் சிலம்ப பயிற்சி

 

இதேபோல், சிலம்ப பயிற்சிக்கு தனியாக ஒரு பயிற்சியாளரை நியமித்து, இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி சீருடை, சிலம்ப மற்றும் கல்வி உபகரணங்கள், சிலம்ப பயிற்சியாளருக்கான ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க, இந்த கிராம மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை மாதம்தோறும் வழங்கி வருகின்றனர். இதற்காக, தனியாக வாட்ஸ்அப் குழு, வங்கி கணக்கு உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கிராமத்தில் சிறந்த சிலம்ப பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் பகுதியில்  மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த   மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.



 

இதில், சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும், கார்த்திக் - கல்பனா தம்பதியின் மகள் தாரகை, 16 வயதினருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். அதே பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும், சிவராஜ் - பார்க்கவி தம்பதியின் மகள் ஜினிதா 15 வயதினருக்கான பிரிவில் முதலிடமும், 3ம் வகுப்பு பயிலும் மருதுபாண்டி - சீத்தா தம்பதியின் மகன் மெய்கீர்த்தி 8 வயதினருக்கான பிரிவில் முதலிடமும், 9ம் வகுப்பு பயிலும் நாத் - உதயகுமாரி தம்பதியின் மகன் அமுதன் 16 வயதினருக்கான பிரிவில் முதலிடமும் பிடித்தனர். இதேபோல், சூனாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அன்பு - மாரியம்மாள் தம்பதியின் மகன் கலை அழகன் 13 வயதினருக்கான பிரிவில் மாநில அளவில் 2வது இடமும், செல்வம் - கோகிலா தம்பதியின் மகன் விஷ்ணு 14 வயதினருக்கான பிரிவில் 2வது இடமும் பிடித்தனர்.

 

வெற்றி பெற்ற மாணவர்கள்

 

அதேபோல், ஆண்டார்குப்பம் அரசு பள்ளியில் பயிலும் இளம்வள்ளல் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் சமத்துவன் 14 வயதினருக்கான பிரிவில் 3வது இடமும், கர்ணா - உதயராணி தம்பதியின் மகன் கலை இலக்கியன் 3வது இடமும், ஞானப்பிரகாஷ் - தாயம்மாள் தம்பதியின் மகள் கோபிகா 12 வயதினருக்கான பிரிவில் 3வது இடமும், கர்ணா - உதயராணி தம்பதியின் மகன் கலை வளவன் 15 வயதினருக்கான பிரிவில் 3வது இடமும், 10ம் வகுப்பு பயிலும் ஜானகிராமன் - அனிதா தம்பதியின் மகன் குருதீப் 16 வயதினருக்கான பிரிவில் 3வது இடமும், 11ம வகுப்பு பயிலும் செல்வவிநாயகம் - முத்துலட்சுமி தம்பதியின் மகன் ஹேமகுமார் 16 வயதினருக்கான பிரிவில் 3வது இடமும் பிடித்தனர். மேலும், பலர் 4வது, 5வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது