பி.எஸ்.ஜி அணியில் இருந்து விலகுவதாக கைலியன் எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


இந்த சீசனின் முடிவில் பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து  விலக போவதாக கைலியன் எம்பாப்பே அறிவித்தது கால்பந்து ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, இவர் பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட்டில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. 


வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பாரிஸ்  செயிண்ட் - ஜெர்மைன் கால்பந்து அணி பார்க் டெஸ் பிரின்சஸில் துலூஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவே பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணிக்காக கைலியன் எம்பாப்பே களமிறங்கும் கடைசி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைலியன் எம்பாப்பே, “அனைவருக்கும் வணக்கம்! இது கைலியன். நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நேரம் வரும்போதெல்லாம் உங்களுடன் பேசுவேன் என்று சொன்னேம். இப்போது பேச வேண்டிய நேரம் வந்துள்ளது. பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணிக்காக இந்த சீசனுடன் எனது பயணத்தை முடித்து கொள்ள போகிறேன் என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். 


இந்த அணியுடனான எனது ஒப்பந்ததை நீட்டிக்க போவது இல்லை. இதனால், பிஎஸ்ஜி அணியுடனான எனது சாகசம் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும். ஞாயிற்றுக்கிழமை பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். 






இங்கு எனக்கு பலவிதமான நினைவுகள் உள்ளது. பல ஆண்டுகளாக எனக்கு மிகப்பெரிய பிரஞ்சு கிளப்பில் வீரராக இருந்தது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஆகும். இது ஒரு கிளப்பில் எனது முதல் அனுபவத்தைப் பெற என்னை இங்கு வர அனுமதித்தது என அனைத்தும் இந்த உலகில் எனக்கு சிறந்த ஒன்றாகும் என்று நினைக்கிறேன். மிகுந்த அழுத்தத்துடன், நிச்சயமாக ஒரு வீரராக வளர, வரலாற்றில் சிறந்த சிலருடன் சேர்ந்து, சில முறை சாம்பியன்களாக மாற்றினோம். அனைத்து வீரர்களும் எல்லாப் புகழுடனும் வளர வேண்டும். 


பிஎஸ்ஜி அணியில் நான் இருந்தபோது இருந்த ஐந்து மேலாளர்கள் -- உனாய் எமெரி, தாமஸ் டுச்செல், மொரிசியோ போச்செட்டினோ, கிறிஸ்டோப் கால்டியர் மற்றும் லூயிஸ் என்ரிக் -- மற்றும் கிளப்பின் விளையாட்டு இயக்குநர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், “ ஒரு அணியுடன் நீண்டகாலமாக இருந்து வெளியேறுவது கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால் தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இது ஒரு புதிய சவால் தேவை என்று நினைக்கிறேன். 


இது என் வாழ்நாள் முழுவதும் என் நினைவில் வைத்திருக்கும் ஒரு கிளப். எனக்கு இங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. நான் இனி ஒரு வீரராக இருக்க மாட்டேன், ஆனால் நான் தொடர்ந்து ஒவ்வொரு ஆட்டத்தையும் பார்த்து ரசிக்கும் ரசிகராக இருப்பேன். 


கடைசி கோப்பையுடன் இந்த ஆண்டை முடிப்போம் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார். 


பிஎஸ்ஜியும் - எம்பாப்பேவும்: 


கடந்த 2017ம் ஆண்டு 18 வயதில் கைலியன் எம்பாப்பே 180 மில்லியன் யூரோ மதிப்பிற்கு பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பிஎஸ்ஜி அணிக்காக 2019-20 சீசனில் ஆறு Ligue 1 பட்டங்களையும் மூன்று Coupes de France ஐயும் வென்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்ஜி அணியின் கேப்டனாக  UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.


இதுவரை பிஎஸ்ஜி அணிக்காக 255 கோல்கள் அடித்து அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கைலியன் எம்பாப்பே முதலிடத்தில் உள்ளார். மேலும், லீக் 1 வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7வது இடத்திலும் இருக்கிறார்.