சவுதி ப்ரோ லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். கடந்த திங்கள்கிழமை அல் நாசர் - அல் இத்திஹாத் அணிகள் மோதியது. அதில், அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிரிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன்மூலம், தற்போது நடைபெற்று வரும் சவுதி ப்ரோ லீக் சீசனில் அவரது கோல் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. 






கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த அட்டகாச கோல் எண்ணிக்கையால் அல் நாசர் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் அல் இத்திஹாத் அணியை வீழ்த்தியது. 


கடந்த 2018-2019 சீசனில் 34 கோல்கள் அடித்து சாதனையை படைத்திருந்த சவுதி ப்ரோ லீக்கில் அப்துர் ரசாக் ஹம்தல்லாவின் சாதனையை, ரொனால்டோ 35 கோல்கள் அடித்து முறியடித்துள்ளார். 


சாதனைக்கு மேல் சாதனை: 






இதன்மூலம், 39 வயதான ரொனால்டோ, நடப்பு சவுதி ப்ரோ லீக் சீசனில் 31 போட்டிகளில் விளையாட்டி ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த சாதனையை படைத்துள்ளார். இது தவிர, ரொனால்டோ நான்கு நாடுகளில் நடைபெறும் நான்கு லீக்களில் விளையாடி ஒரே சீசனில் அதிக கோல்களை அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


இந்த சாதனையை படைத்த பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இன்ஸ்டாகிடாம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ நான் சாதனைகளை துரத்துவதில்லை, ஆனால், சாதனைகள் என்னை துரத்துகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். 






அல் நாசர் - அல் இத்திஹாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மெஸ்ஸியின் பெயரை கோஷமிட்டதால் சிறிது நேரம் ஸ்டேடியத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 


சாம்பியன் பட்டத்தை மிஸ் செய்த ரொனால்டோ அணி :






2023-2024 சவுதி ப்ரோ லீக் சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நாசர் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அல்-ஹிலால் சீசனில் 96 புள்ளிகளைப் பெற்று, அல்-நாசரை தோற்கடித்து பட்டத்தை வென்றார். ரொனால்டோ அணி இரண்டாவது இடத்தில் பிடித்து இருந்தாலும், அல்-நாசர் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் சாம்பியன்ஸ் லீக் எலைட்டுக்கு தகுதி பெற்றது.