ஆடவர் சீருடையை மகளிர் கிரிகெட் அணிக்கு ஆல்டர் செய்து கொடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


பிசிசிஐயின் முன்னாள் சேர்மன் வினோத் ராய். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறாக கூறியுள்ளார். நாட் ஜஸ்ட் எ நைட்வாட்சேமேன் ( Not just a Nightwatchman ) என்ற புத்தகத்தில் அவர் பல்வேறு விசயங்களையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.


"பெண்கள் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே அதற்கேற்ற மரியாதை இன்னும் செலுத்தப்படவில்லை என்றே நான் உணர்கிறேன். 2006 ஆம் ஆண்டு வரை மகளிர் கிரிக்கெட் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளப்படவில்லை. சரத் பவார் தான் 2006ல் மகளிர், ஆடவர் கிரிக்கெட் சங்கங்கள் தனித்தனியாக இருந்ததை ஒன்றாக மாற்றினார். அப்போது தான் ஆடவர் அணியின் சீருடையையே மகளிர் அணிக்காக ஆல்டர் செய்து கொடுக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனே நைக் நிறுவனத்துக்கு போன் செய்தேன். இது சரிவராது, மகளிர்க்கு என தனியாக சீருடை வடிவமையுங்கள் என்று கூறினேன். பெண்கள் அணியும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் ஆகச் சிறந்ததே சென்று சேர வேண்டும் என்று நான் விரும்பினேன். அது பயிற்சியாக இருந்தாலும் சரி இல்லை பயிற்சி உபகரணங்கள், ஆடைகள், பயண வசதிகள், மேட்ச் கட்டணம் என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு சிறப்பானது கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த குறைபாட்டைக் களைய பாடுபட்டேன்.






2017 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி ஃபைனல்ஸை எட்டியது. அப்போதுதான் இந்திய மகளிர் அணி மீது உரிய கவனம் பட்டதாக நான் உணர்ந்தேன்.


அதுவரை நானும் கூட இந்திய மகளிர் அணிக்கு சரியான கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணம் எனக்கு இன்றும் உண்டு.  2017 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் 171 நாட் அவுட் என்று சிறப்பாக ஆடியிருந்தார். அது பற்றி ஹர்மன்ப்ரீத் என்னிடம் கூறும்போது, சார் எனக்கு வயிற்றுவலி. என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் சிக்ஸர்களாக அடித்தேன் என்று கூறினார். அதேபோல் காலை உணவாக கேட்டது கிடைக்காத போது சமோஸாவை சாப்பிட்டுவிட்டு மகளிர் அணியினர் விளையாடினர்" என்று கூறியுள்ளார்.