கடந்த 2021 ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்று டி20 உலகக் கோப்பை ஆசிய இரண்டு முக்கிய தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்த பிறகு, 2022 ம் ஆண்டு ஒரு புதிய தலைமை தொடக்கத்தின் நம்பிக்கையின் கீழ் தொடங்கியது.


விராட் கோலியிடம் இருந்து ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரோகித் - டிராவிட் கூட்டணி இந்திய அணியை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 


2022 முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு இந்தாண்டு சற்று பின்நோக்கியே சென்றது. புதிய அணி தேர்வு முதல் உத்தி மற்றும் உடற்தகுதி அனைத்துமே செயலற்றதாகவே முடிந்தது. இந்தாண்டு இந்திய அணியின் செயல்பாடு என்ன என்பதை ஒரு ரீ-வைண்டாக பார்க்கலாம். 


தென்னாப்பிரிக்கா முதல் வங்கதேச தோல்வி வரை: 


டிராவிட் பயிற்சி தலைமையிலான இந்திய அணி கடந்த 2021 ம் ஆண்டு முடிவில் செஞ்சூரியனின் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முதல் போட்டியிலிருந்தே, இந்தியா அணி தோல்வியை சந்திக்க தொடங்கியது. 


முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பிருந்தும் இந்திய அணி, ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் டெஸ்டில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தனர். 


தொடர்ந்து, கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. அதிலும், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. 


அதன் தொடர்ச்சியாக, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை எதிரான போட்டிகளில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை வென்றிருந்தாலும், முக்கியமான தொடர்களில் இந்திய அணி சறுக்கலை மட்டுமே கண்டது. இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி இந்தாண்டு நடந்தது. அதிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஆனால், அங்கு நடந்த டி20 தொடரை வென்று இங்கிலாந்து அணியை மிரட்டியது. 


ஆசியக்கோப்பை மற்றும் டி 20 உலகக் கோப்பை: 


ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பொறுத்தவரை சூப்பர் 4 சுற்றில் தத்தளித்து தொடரில் இருந்து வெளியேறியது. ஆசிய கோப்பையைப் போலவே, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கர வெற்றியுடன் தொடங்கியது. இருப்பினும், பெர்த்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவைத் தவிர பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தோல்வியை சந்தித்தது. 


இருந்தாலும், சூப்பர் 12 சுற்றில் எளிதாக இடம்பிடித்த இந்திய அணி, அடிலெய்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. 


2022 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த சோகத்தோடு முடிவடையவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. 


இன்னும் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட்கள் உள்ளது. அதில், இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. 


கோலி கேப்டன்சி பறிப்பு:


கோலி டி20 கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்ததற்கு பிறகு, கோலியிடம் இருந்து வலுகட்டாயமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சி பதவிக்கு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்பப்பட்டது. 


முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகும்படி கேட்கப்பட்டது மற்றொரு எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டார். 


சேத்தன் சர்மா தேர்வுக்குழு கலைப்பு:


2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு கலைக்கப்பட்டது. தற்போது புதிய தேர்வுக்குழுவை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


காயம்:


இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக பெரிதாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. இதுவே இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது