இந்தியன் மகளிர் பிரிமியர் லீக் இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தினை எட்டிவிட்டது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனிலும் ஐந்து அணிகள் களமிறங்கின.


லீக் சுற்றின் கடைசி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.  


சொதப்பிய குஜராத்


நேற்று டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. குஜராத் அணி முதல் ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டினை இழந்தது. அதன் பின்னர் நான்காவது மற்றும் ஐந்தாவது ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்க குஜராத் அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. 4.2 ஓவர்களில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 16 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. குறிப்பாக மரிஜான் காப் பந்தில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 


அதன் பின்னர் நிலைமையை சரி செய்ய லிட்ச்ஃபீல்ட் மற்றும் கிரண்டர் கூட்டணி நிதானமாக ஆடிவந்த நிலையில், கிரண்டர் தனது விக்கெட்டினை 12 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். இவருடன் கூட்டணி சேர்ந்து நிதானமாக ஆடிவந்த லிட்சிஃபீல்டும் தனது விக்கெட்டினை இழக்க, குஜராத் அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 


குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்க பாரதி ஃபுல்மாலி மற்றும் பிரைஸ் இருவரும் குஜராத் அணிக்காக பொறுப்பான இன்னிங்ஸ் ஆடினர். பாரதி ஃபுல்மாலி 36 பந்துகளில் 7 பவுண்டரி விளாசி 42 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த பிரைஸ் 22 பந்தில் 28 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ஷிகா பாண்டே, மரிஜான் காப் மற்றும் மின்னு மனி தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.


கெத்து காட்டிய டெல்லி


அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில் களமிறங்கியது. டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் அணியின் ஸ்கோர் 31 ரன்களாக இருந்த போது தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த அலீசா கேப்சி தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழக்க, டெல்லி அணி 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் குஜராத் அணிக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் ஷாஃபாலி வர்மா மற்றும் ஜெமிமாவின் அதிரடியான ஆட்டத்தினால் குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இறுதியில் டெல்லி அணி 13.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் ஷாஃபாலி வர்மா 37 பந்தில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் விளாசி 71 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.