ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதவுள்ளன.


பரம வைரிகளான இரு அணிகளும் இன்று மெல்போர்னில் மோதுகின்றன. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தானும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதுகின்றன. சென்ற ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் குரூப் 2 பிரிவு ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.


அப்போதைய இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாகச் செயல்பட்டார். தற்போது ரோகித் சர்மா கேப்டனாகச் செயல்படவுள்ளார். இந்தக் கட்டுரையில் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பார்க்கலாம்.


சென்ற ஆண்டு இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆஸாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், சோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரெளப், ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சென்ற ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி, 3 இல் வெற்றியும், 2 இல் தோல்வியும் அடைந்தது. 6 பாயிண்டுகள் பெற்று அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறவில்லை.


பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 5இலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. அதிக பலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. கேப்டன் பாப் ஆஸாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஷஹீன் அஃப்ரிடி ஆகிய வீரர்கள் இந்த உலகக் கோப்பையிலும் நீடிக்கின்றனர்.


இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய வீரர்கள் நீடிக்கின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக இருந்தபோதிலும் பந்துவீச்சில் சற்று வலிமையற்று இருக்கிறது. காயம் காரணமாக பும்ரா விலகிய காரணத்தால் நாம் பின்தங்கி இருக்கிறோம். 


இரு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் அனுபவம் குறைந்த வீரர்களும் இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.