உள்ளூர் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே போட்டியில் செளராஷ்டிரா-மகாராஷ்டிரா இடையேயான ஃபைனலில் செளராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு பிசிசிஐ கெளரவ செயலர் ஜெய் ஷா கோப்பையை வழங்கினார்.


இதன்மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி சாம்பியன் ஆகியுள்ளது. அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் செளராஷ்டிரா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. 


கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் (108 ரன்கள்) விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸிம் காஸி 37 ரன்களும், நவுஷத் ஷேக் 31 ரன்களும் எடுத்தனர். செளராஷ்டிரா சார்பில் சிராக் ஜனி 10 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 






இலக்கை விரட்டிப் பிடித்த செளராஷ்டிரா
இதையடுத்து 249 ரன்கள் என்ற கடினமான இலக்கை செளராஷ்டிரா அணி விரட்டி பிடித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ஹார்விக் தேசாய் 50 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்களும் எடுத்தனர்.


CSK : சிஎஸ்கே அணியின் புதிய பவுலிங் கோச் ஆன முன்னணி வீரர் யார் தெரியுமா மக்களே?


எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஷெல்டன் ஜாக்சன் மட்டும் நின்று விளையாடி அசத்தினார்.
கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 133 ரன்கள் (5 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) அடித்தார்.
மகாராஷ்டிர அணி சார்பில் முகேஷ் செளதரி, விக்கி ஓஸ்ட்வால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ஆட்டநாயகனாக ஷெல்டன் ஜாக்சனும், தொடர் நாயகனாக ருதுராஜ் கெய்க்வாடும் தேர்வு செய்யப்பட்டார்.


முன்னதாக, இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ  நியமிக்கப்பட்டார்.


ஐபிஎல் தொடர் 2008-ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது முதல் பிராவோ விளையாடி வந்தார்.
2008-ஆம் ஆண்டு முதல் 2010 வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும், 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பிராவோ விளையாடினார். பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை அவர் சிஎஸ்கேவில் நீடித்தார்.


இந்நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது:


நான் புதிய பயணத்தை தொடங்க விரும்புகிறேன். நான் விளையாடியது போதும் என்று உணர்கிறேன். நான் பந்துவீச்சாளர்களுடன் பணிபுரிவதை விரும்புகிறேன். வீரரானது முதல் தற்போது கோச் ஆவது வரை நான் எதுவும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


நான் விளையாடிக் கொண்டிருந்தபோது அனைத்து பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து பழகியிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் நான்தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிராவோ தெரிவித்தார்.