36 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து இருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் இந்திய அணி மோசமான சாதனையை செய்திருக்கிறது.


இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. மழை பெய்துள்ள சூழலில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.


36 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனை:


ஆனால் நடந்ததோ வேறு. இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதாவது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய சர்பராஸ்கானும் டக் அவுட் ஆனார். இதனிடையே யஜஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். 23 ஓவர்கள் முடிவில் 34 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 20 ரன்களை பதிவு செய்தார்.  






பின்னர் வந்த குல்தீப் யாதவ் 2 ரன்கள், ஜஸ்ப்ரித் பும்ரா 1 ரன்கள் எடுக்க முகமது சிராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார். இவ்வாறாக இந்திய அணி 31.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே எடுத்தது.


இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி. இதற்கு முன்னதாக, கடந்த 1987 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 75 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வில் ஓ ரோர்கி 4 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.