Indian Cricket Team: டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, ரசிகர்கள் உற்சாக் வரவேற்பளித்தனர்.


தாயகம் வந்தடைந்த இந்திய வீரர்கள்:


அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பையை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. 


















ரசிகர்கள் வரவேற்பு:


தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு, நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ”இந்தியா, இந்தியா” என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து வீரர்கள் தங்கவுள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலிலும் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டி20 உலகக் கோப்பை வடிவில் கேக் செய்யப்பட்டு, அதில் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தாயகம் திரும்புவதில் தாமதம் ஏன்?


சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து உடனடியாக இந்தியா தாயகம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்படாஸில் புயல் எச்சரிக்கை விடப்பட்டது. கனமழையுடன் சூறாவளிக்காற்றும் வீசி வந்ததால், அங்கு விமான சேவை முடங்கியது. இதனால், இந்திய அணி தாயகம் திரும்புவது தொடர்ந்து தாமதமானது. இந்நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற 4 நாட்களுக்குப் பிறகு இந்திய அணி, இன்று டெல்லி வந்தடைந்துள்ளது.