இலங்கை சுற்றுப்பயணம்:


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவையும் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவையும் நியமித்துள்ளது பிசிசிஐ. 


டி20 உலகக் கோப்பையின் போது துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி சுப்மன்கில்லுக்கு புதிதாக துணைக்கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கவுதம் கம்பீர் தான். 


டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்தததால் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டார். கம்பீர் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ள முதல் தொடர் இலங்கை அணிக்கு எதிராகத்தான். இதனால் அணியில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. இந்நிலையில் தான் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு சாரண வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.


கம்பீரின் பரிந்துரை:


குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் முழுமையாக விளையாடுவதில்லை. எனவே அவருக்கு பதிலாக சூர்யகுமாரை 2026 டி20 உலகக் கோப்பையின் கேப்டனாக வளர்க்க கவுதம் கம்பீர் பரிந்துரைத்ததாக  தகவல்கள் வந்தன.  இச்சூழலில் தான் அது தற்போது உறுதியாகியுள்ளது.


அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்ட  இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரவி பிஸ்னோய், ரியான் பராக் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் மீண்டும் அணிக்கு திருப்பியுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல், முகமது சிராஜ், கலீல் அஹ்மத் ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர்.


இந்திய டி20 அணி வீரர்கள்:


சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், கலீல் அஹ்மத், அர்ஷ்தீப், சிராஜ்