ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 பேர் கொண்ட இந்த அணியினை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். 


இந்திய அணி: 


ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணைக் கேப்டன்), ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல், அக்சர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் 






மாற்று வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்


இளம் வீரர்களுக்கு வாய்ப்பு


2024ஆம் ஆண்டுக்கான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுக்கும் அதேநேரத்தில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு  வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பலமுறை தனது திறமையை நீரூபித்தும் இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வந்த சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 


மீண்டு வந்த ரிஷப் பண்ட்க்கு இடம்: 


2022ஆம் ஆண்டு டிசம்பரில் பெரும் கார் விபத்திற்குள்ளாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் விபத்துக்காயங்களில் இருந்து மீண்டு வந்தது மட்டும் இல்லாமல், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவது மட்டும் இல்லாமல் சிறப்பாக பேட்டிங் செய்தும் வருகின்றார். ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 361 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து  வருகின்றார். 


 


நம்பிக்கை கொடுக்கும் சீனியர் வீரர்கள்


இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ரோகித் சர்மா, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, ரன் மெஷின் எனப்படும் விராட் கோலி, சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல், வேகப்பந்து வீச்சாளார்களான பும்ரா மற்றும் முகமது சிராஜ். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் அணியில் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 


சூர்யகுமார் யாதவ்


சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றிருப்பது இந்திய அணிக்கு மிகவும் பலமாக பார்க்கப்படுகின்றது. அதிரடிக்குச் சொந்தக்காரரான சூர்யகுமார் யாதவ் பல மேட்ச் வின்னிங் ஆட்டங்களை ஆடியுள்ளார். 


ஏமாற்றத்தில் ரசிகர்கள்


உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், தமிழ்நாடு வீரர்களான நடராஜன், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் இடம்பெறாததது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.