ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா  இளம் அணியை எதிர்த்து களமிறங்கும் இந்திய இளம் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ”Go well, boys!

” எனக் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த இரண்டு இறுதிப் போட்டிகளுக்கும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றவர் கேப்டன் ரோகித் சர்மா. இவரது தலைமையிலான இந்திய அணியை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி உலக மகுடம் சூடியது. 


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் மோதுகின்றது எனத் தெரிந்தவுடன், ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஜூனியர் அணியை இந்திய ஜூனியர் அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய ஜூனியர் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 


இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை ஹாரி டிக்ஸன் மற்றும் சாம் ஹான்ஸ்டஸ் ஆகியோர் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன்கள் சேர்க்கவேண்டும் என நினைத்து தேவையற்ற ஷாட்களை தவிர்த்து வந்தனர். ஆனால் 8 பந்துகளை எதிர்கொண்ட சாம் தனது விக்கெட்டினை ராஜ் லிம்பானி பந்தில்  ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் வந்த கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இருவரும் இணைந்து 20 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 90 ரன்களை எட்டவைத்துவிட்டனர். இருவரும் அரைசதத்தினை நெருங்கிக் கொண்டு இருந்தபோது இந்த கூட்டணியை இடது கை வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரி கைப்பற்றினார். ஹாரி டிக்ஸன் 42 ரன்னிலும், ஹூஹ் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 


வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சற்று சரிவை உண்டாக்கும் என எதிர்பார்த்தபோது, களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் சிறப்பாக விளையாடி சூழலை ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக மாற்றினார். ஆனால் ஹர்ஜாஸ் சிங் தனது விக்கெட்டினை 64 பந்தில் 55 ரன்கள் சேர்த்த நிலையில் சௌமி பாண்டே பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் அதிரடியாக 3 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின் பந்துவீச்சாளார்கள் சற்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மிகவும் தீவிரமாக விளையாடினர். குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் டைல் எண்டர்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியால் தான் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை.  இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள்  சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும் நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பந்து வீச்சாளர் முருகன் அபிஷேக் 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றவில்லை என்றாலும் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக விளையாடினார்.