IND vs BAN: கேட்ச்சை விட்ட ரோகித்.. தண்ணி காட்டும் தெளகித்.. சிதறவிடும் ஜாகர் அலி
IND vs BAN Champions Trophy 2025: வங்கதேச அணிக்காக 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தெளகித் - ஜாகர் அலி ஜோடி இந்திய அணிக்கு சவால் தரும் விதமாக பேட்டிங் ஆடி வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - வங்கதேம் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
கேட்ச்சை கோட்டை விட்ட ரோகித்:
ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷமி தொடக்க ஓவரிலே செளமியா சர்காரை டக் அவுட்டாக்கிய வெளியேற்றினார். அடுத்த ஓவரிலே ஹர்ஷித் ராணா பந்தில் கேப்டன் ஷாண்டோ அவுட்டாகினார். வங்கதேச அணியின் மெஹிதி ஹாசனும் 5 ரன்னில் அவுட்டாக, தனி ஆளாக போராடிய தன்ஷித் ஹாசனும் 25 ரன்னில் அவுட்டானார்.
தன்ஷித் ஹாசனை அக்ஷர் படேல் தனது சுழலில் காலி செய்ய, அடுத்த பந்திலே வங்கதேசத்தின் அனுபவ வீரர் ரஹீம் டக் அவுட்டானார். இதனால், அக்ஷர் படேலுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் வீசிய பந்தில் 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜாகர் அலி ரோகித் சர்மாவின் கைக்கே கேட்ச் கொடுத்தார்.
மிரட்டும் ஜாகர் அலி:
மிகவும் எளிமையாக கைக்கு வந்த கேட்ச்சை கேப்டன் ரோகித் சர்மா கோட்டை விட்டார். இதனால், கடுப்பாகிய ரோகித்சர்மா மைதானத்தின் தரையில் தனது கைகளால் கோபமாக தட்டினார். 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணிக்கு ரோகித் சர்மா கொடுத்த பொன்னான வாய்ப்பை ஜாகர் அலி கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
அதன்பின்பு, அவரும் தெளகித் ஹிரிதோயும் இணைந்து மெல்ல மெல்ல வங்கதேச அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வங்கதேசத்தை சரிவில் இருந்து மீட்டனர். தொடக்கத்தில் தடுமாறிய இவர்கள் இருவரும் அதன்பின்பு களத்தில் நங்கூரமாக நின்றனர்.
போராடும் இந்திய பவுலர்கள்:
8.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 20 ஓவர்களை தாண்டுமா? என்று இருந்த நிலையில், இருவரும் இணைந்து 30 ஓவர்களை கடந்து அபாரமாக ஆடி வருகின்றனர். வங்கதேச அணி 150 ரன்களை கடந்து ஆடி வருகிறது. இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வருகின்றனர்.ஜாகர் அலி - தெளகித் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முகமது ஷமி, ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை பயன்படுத்தியும் இந்த ஜோடியைப் பிரிக்க இயலவி்ல்லை.
வங்கதேச அணிக்காக பின்வரிசையில் ரிஷத் ஹோசைன், தன்ஷிம் ஹசன் சகீப், டஸ்கின் அகமது, முஸ்தபிஷீர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதனால், விக்கெட்டுகளை இழந்துவிடாமல் ஜாகர் அலி - தெளகித் ஜோடி நிதானமாக ரன்களை குவித்து வருகின்றனர். இன்னும் 15 ஓவர்களுக்கு மேல் இருப்பதால் இந்த பார்ட்னர்ஷிப் நீடித்தால் கடினமான இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த பார்ட்னர்ஷிப்பை விரைவில் வீ்ழ்த்த வேண்டியதும் இந்திய அணிக்கு அவசியம் ஆகும.