இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ரசிகர் ஒருவருக்கு ரோஜா கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற முதல் போட்டியில் தனது மைத்துனரின் திருமண விழாவுக்குச் சென்றதால் ரோகித் ஷர்மா விளையாடவில்லை. ஆனால், இரண்டாவது போட்டியில் அணியில் இணைந்து அணியை வழி நடத்தினார். இந்த போட்டியில் விளையாட விசாகப்பட்டினத்திற்கு வந்த இந்திய அணி வீரர்களை வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரை கவனித்த ரோகித் ஷர்மா, தன்னை வரவேற்க தனக்கு கொடுக்கப்பட்ட ரோஜாவை அந்த ரசிகருக்கு கொடுத்தார். இதனை சற்றும் எதிர் பார்க்காத அந்த ரசிகர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார், அவருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில்  ரோகித் ஷர்மா ரசிகரைப் பார்த்து நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா எனக் கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்காக இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச் 19) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னல் வேகத்தில் பந்துகளை வீசிய மிட்ஷெல் ஸ்டார்க் இந்திய அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். குறிப்பாக சுப்மன் கில்லை முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆக்கினார். இங்கு தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடியும் வரை இருந்தது. இதனால், இந்திய அணி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதும் போவதுமாகவே இருந்தனர்.  இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து117  ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், அப்பேட் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். 






இதன் பின்னர் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது, தொடக்க ஆட்டக்காரர்களான டேவிஸ் ஹெட் மற்றும் மிட்ஷெல் அதிரடியாக ஆடினர். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசிய வண்ணம் இருந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணியில் இருந்த பந்து வீச்சாளர்களில் ஐந்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். ஆனால், சிறந்த பார்மில் இருந்த மிட்ஷெல்  மார்ஷ் மற்றும் டேவிஸ் ஹெட் இருவரும் தங்களது அதிரடியை குறைக்க வில்லை. 


இறுதியில், 11 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்ஷெல் மார்ஸ் 66 ரன்களும் எடுத்து இருந்தனர்.