ரிக்கி பாண்டிங் நீக்கம்:


டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் நேற்று நீக்கப்பட்டார். அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருந்தார். இச்சூழலில் தான் கடந்த 7 ஆண்டுகள் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் அந்த பொறுப்பில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கிறார்.


7 ஆண்டுகளாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் ரிக்கிப்பாண்டிங்கால் டெல்லி கேபிடல்ஸ் அணியிக்கு ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட பெற்றுத்தர முடியவில்லை. இது அந்த அணி ரசிகர்கர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதேபோல் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டதற்கு கங்குலிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அண்மையில் கங்குலி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.


கங்குலி தான் காரணமா?


அதில், "நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான திட்டங்களை செய்ய வேண்டும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக நான் ஒரு முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மெகா ஏலம் வர இருக்கிறது. எனவே, நான் இப்போது இருந்தே அதற்கான திட்டத்தை தொடங்க வேண்டும். நான் ஒரு செய்தியை இங்கே உடைக்கிறேன்.


ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க மாட்டார்.  ரிக்கி பாண்டிங் குறித்து ஜெஃப்ரி பாய்காட் சொன்னது சரிதான். கடந்த ஏழு ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியை எந்த வகையிலும் முன்னே கொண்டு செல்லவில்லை. இது குறித்து நான் அந்த அணி நிர்வாகத்திடம் பேச வேண்டும்.


இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என சொல்லப் போகிறேன். நான் கூட தலைமை பயிற்சியாளராக இருக்கலாம். நான் எப்படி செயல்படுகிறேன் எனப் பார்ப்போம்" என்று கங்குலி கூறியிருந்தார். அதே நேரம் ரிக்கி பாண்டிங் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.


ஆனால், அதில் வெற்றி பெற முடியவில்லை. அடுத்து 2021 ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த இரண்டு ஆண்டுகள் பாண்டிங் தலைமையில் அந்த அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.