முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர், நடிகர் யோகராஜ் சிங் இங்கிலாந்து டூர் செல்வதற்காக பெட்டியை பேக் செய்து கொண்டிருக்கும்போது ஒரு போன் கால் வருகிறது. வேறு யாருமல்ல யுவராஜ் சிங்தான். "சொல்லு யுவி, பேக் பண்ணிட்டு இருக்கேன்", என்று கூறியுள்ளார். அவரிடம் யுவராஜ் சிங், "அப்பா சச்சின் உங்களுக்கு கொஞ்ச நேரத்துல கால் பண்ணுவாரு, அவரு பையனை பத்தி பேசுவார், அவருக்கு உதவுங்கள் ப்ளீஸ்", என்று கூறியுள்ளார்.


யுவராஜ் போன் செய்த சிறிது நேரத்தில் சச்சின் போன் செய்திருக்கிறார். ரஞ்சிக் கோப்பைக்கு முன்னதாக அர்ஜுனுக்கு ட்ரெய்னிங் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இங்கிலாந்து செல்ல இருந்தவர் பயணத்தை தள்ளிப்போட்டுவிட்டு பயிற்சியில் இறங்கினார். யோகராஜ் சிங் 1980 க்கும் 86க்கும் இடையில் 1 டெஸ்ட் போட்டி மற்றும் 6 ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியவர் ஆவார். அதுமட்டுமின்றி யுவராஜ் சிங் என்னும் ஜாம்பவானை முழுக்க முழுக்க பயிற்சி அளித்து உருவாக்கியது அவர்தான். சண்டிகர் டிஏவி கல்லூரி மைதானத்திற்கு அர்ஜுனை வரச்சொல்லி பயிற்சி அளித்திருக்கிறார் யோகராஜ் சிங். 



பந்துவீச்சில் இருந்த பிரச்சனை


அர்ஜுன் கோவாவுக்காக ரஞ்சியில் விளையாடினார். பயிற்சிக்கு முன் நீண்ட நேரம் அவரோடு பேசியுள்ளார் யோகராஜ் சிங். அப்போது, "முதலில் நீ சச்சினின் மகன் என்பதை மறந்துவிடு. உனக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. நாளை முதல் வா, உனக்கு 15 நாள் பயிற்சி அளிக்கிறேன்", என்று கூறி அனுப்பியுள்ளார். முதல் நாள் அர்ஜுன் மைதானத்திற்கு வரும்போது ஏற்கனவே அங்கு காத்திருந்தார் யோகராஜ் சிங். அவரிடம், "10 ரவுண்ட் ஓட சொன்னேன், நன்றாகவே ஓடினார். பின்னர் நெட்ஸ்-இல் பந்து வீசச்சொன்னேன், அவரிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால் அவர் பந்துவீசும்போது அவரது கை காதை ஒட்டி இருந்தது. அதனை மாற்றச்சொன்னேன், அவர் மிகவும் விரைவாக கற்கும் திறன் கொண்டவர். சீக்கிரமே மாற்றிக்கொண்டார்", என்று இங்கிலாந்தில் இருந்தபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார் யோகராஜ் சிங்.


அடுத்ததாக அவருடைய பேட்டிங். யோகராஜ் சிங் கடினமான டாஸ்குகள் கொடுத்து பயிர்ச்சி அளிப்பவர் என்று பலர் கூறுவார்கள். பேட் அணிந்து வரச்சொல்லி அவருக்கு பந்துவீசுவதற்கு என்று சிலரை களத்தில் இறக்கினார். 


தொடர்புடைய செய்திகள்: Elon Musk: "முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகுவேன் " - எலான்மஸ்க் அதிரடி அறிவிப்பு..!


அதிரடி பேட்டிங்கால் ஈர்த்தார்


நன்றாகவே பேட் செய்த அவர், பல சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அதனால் கவரப்பட்ட யோகராஜ் சிங் அதனை பாராட்டாமல் அர்ஜுனிடம், "அப்பாவுடைய பாதிப்பில் இருந்து வெளியே வா போதும், நல்லா ஹார்ட் ஒர்க் பண்ணு, உலகின் சிறந்த ஆல்-ரவுண்டரா வருவ", என்று கூறியுள்ளார். அவரைபற்றி கூறிய அவர், "அவர் ஒரு சிறந்த பேட்டிங் ஆல்-ரவுண்டர். அவரை ஏன் கீழ் ஆர்டரில் இறங்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர் விளையாடுவது எனக்கு யுவராஜ் சிங்கை ஞாபகப்படுத்துகிறது. அதே மாதிரியான உடல்மொழி, மற்றும் யுவராஜ் மாதிரியான அதிரடி வீரர் அவர். சச்சின் அளவுக்கு பெரிதாக பேசப்படும் வீரராக வருவார். பயிற்சியின்போது ஒரு ஃபீல்டர் வீசிய த்ரோ அவரது தாடையில் பட்டு ரத்தம் வந்தது. நான் அவரை பார்த்து ஐஸ் வச்சுட்டு நாளைக்கு வா என்றேன். ஆனால் அவர் ஐஸ் வைத்துவிட்டு வந்து 'பயிற்சியை தொடரலாம்' என்றார். அப்போது 1989 இல் வாக்கர் யூனிஸ் வீசிய பந்தால் காயமடைந்தபின் அயராது பேட்டிங் செய்த அவரது தந்தையை ஞாபகப்படுத்தினார்", என்றார். 



சச்சினிடம் பேசிய யோகராஜ்


பயிற்சி முடிந்த பின்னும் தினமும் விடியோ கால் செய்வதாக கூறினார். மேலும் பயிற்சிக்கு பிறகு சச்சின் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அப்போது, "அர்ஜுனை அவரது அம்மாவிடம் இருந்து விலக்கி வையுங்கள். எந்த அம்மாவுக்கும் தனது மகன் அடிப்படுவதை ரத்தம் சிந்துவதை பார்க்கமுடியாது. உங்கள் மகன் திறமையான வீரர், அந்த திறமையை மும்பை இழந்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வீரராக வருவார். முதலில் அர்ஜுன், அப்புறம்தான் அர்ஜுன் டெண்டுல்கர்", என்று கூறியதாக தெரிவித்தார். முதல் தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக நம்பர் 7-இல் இறங்கிய அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக செஞ்சுரி அடித்தார். வான்கடேயில் குஜராத்துக்கு எதிராக 207 பந்துகள் விளையாடி 120 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 2 சிக்ஸர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். அர்ஜுனின் இந்த செயல்பாடுகளுக்கு பிறகு யுவராஜ் சிங்கும் சச்சினும் எனக்கு போன் செய்து நன்றி தெரிவித்தனர் என்றார் யோகராஜ் சிங்.